மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவான விளக்கமளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ்! | தினகரன் வாரமஞ்சரி

மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவான விளக்கமளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஆரம்ப தினத்திலேயே இலங்கை விவகாரம் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டமையால் சர்வதேசத்தின் கவனம் இதன் மீது ஈர்க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை பற்றி வெளியிட்ட கருத்துகளே இதற்குக் காரணமாக அமைந்தது. இலங்கை விடயத்தில் அவதானித்தவற்றை தனது உரையில் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், அவர் முன்வைத்த கருத்துகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெட்டத் தெளிவான பதிலை வழங்கியுள்ளார்.

46/1 பிரேரணையின் கீழ் நிறுவப்பட்ட எந்தவொரு வெளியகப் பொறிமுறைக்கான முன்மொழிவையும் இலங்கை நிராகரிப்பதுடன், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இன்றிய வெளியகப் பொறிமுறையினால் பயன் இல்லையென்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

கொவிட் -19 சவால்கள் காரணமாக மெய்நிகர் முறையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“தீர்மானம் 46/1 ஆல் நிறுவப்பட்ட எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவையும் நாங்கள் நிராகரிக்கும் அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுகின்றன. தீர்மானம் 30/1 இனால் நாங்கள் அனுபவித்தபடி இது எமது சமூகத்தைத் துருவப்படுத்தி விடும்.

மனித உரிமைகள் பேரவை அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால் அந்த நாட்டினால் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன், அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும்.

குறிப்பாக உலகின் பல பகுதிகளில் மனிதாபிமான மற்றும் ஏனைய ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக அவை அவசரமாகத் தேவைப்படும் போது, இந்த முயற்சியில் செலவிடப்பட்ட வளங்கள் தேவையற்றவை ஆகும்.”

இவ்வாறு பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, மனித உரிமை முறைமையினால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் வலுவான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

'எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை ஒழித்தது. நாம் எமது மக்களின் நலனுக்காக சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளோம். எமது ஜனநாயக மரபுகளை நாம் உறுதியாகப் பேணி வந்தோம். மிகவும் அண்மையில் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களில், அதிக அளவிலான வாக்காளர்களின் பங்கேற்புடன் வழக்கமான இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது'.

குணப்படுத்துதல் என்ற கண்ணோட்டத்தில் மோதலுக்குப் பிந்திய மீட்பு நடவடிக்கைகளைக் கையாள்கின்றோம். மிகவும் அண்மையில், தீவிரமான பயங்கரவாதக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட 16 விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. மோதலுக்குப் பிந்திய கண்ணிவெடி அகற்றல், புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களின் வெற்றியானது, தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. பேரழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 தொற்றுநோயின் நாளாந்த சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

‘அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளில், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அதன் முக்கிய செயற்பாடாக ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனவர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளது. அத்துடன் இழப்பீட்டு அலுவலகம் இந்த ஆண்டு 3775 கோரிக்கைகளை செயலாக்கியுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அதன் 8 அம்ச செயற்றிட்டத்தைத் தொடர்கின்றது. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது. நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழுவொன்று சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளித்தார். இது ஒருபுறமிருக்க, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுசீரமைப்பது அல்லது நீக்குவது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுவதுடன், இந்த விவகாரம் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தினால் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

இது விடயத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டு வரவும் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், இதுபோன்ற வழக்குகளை விரைவாக சமாளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விரைந்து தீர்ப்பதும் நடைபெற்று வருகின்றது’ என பேராசிரியர் விளக்கமளித்தார்.

“பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், முந்திய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்காக, நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் ஆதரவைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் சிவில் சமூகத்துடன் தீவிரமான ஈடுபாட்டைப் பராமரிக்கின்றோம்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினம் அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து, அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்து மதங்களைச் சார்ந்த இலங்கையர்களைப் பாதுகாப்பதிலும் எப்போதும் போல நாம் விழிப்புடன் இருப்போம்” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.

கொவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய மற்றும் அழுத்தமான சவால்களின் கீழ், சமூக வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதை அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாக நாங்கள் கருதுகின்றோம். எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாம் வெளிப்படையாக இருக்கின்றோம். பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கமாக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கமொன்றை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சர்வதேசத்தின் முன்னிலையில் எடுத்துக் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் மறுபுறத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கைக்குத் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுப்பதற்காக சில தரப்பினர் பணியாற்றி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை தவறானதொரு விடயமாக சித்தரிப்பது போன்று அரசியல் செயற்பாடுகளில் எதிரணியினர் சிலர் ஈடுபடுகின்றனர்.

கொவிட்-19 என்ற கொடிய தொற்று நோயினால் நாடு சவால்களுக்கு முகங் கொடுத்திருக்கும் நிலையில் அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தே வருகிறது. எனினும் இலங்கை தொடர்பில் தவறான பிம்பம் ஒன்றை வழங்குவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம், ஐ.நாபொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் செல்லவுள்ளார். இதனை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் முதலாவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டமாக இது அமையவுள்ளது.

Comments