சிறுத்தை சிவாவுடன் கை கோர்க்கும் சூர்யா! | தினகரன் வாரமஞ்சரி

சிறுத்தை சிவாவுடன் கை கோர்க்கும் சூர்யா!

'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரரை போற்று' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதனை தொடர்ந்து வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மேலும் சில போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் 'வாடிவாசல்' படத்திற்கு முன்பாக சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்க வருகிறார். இதனை தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனால் இந்த இடைவெளியில் சிவா இயக்கத்தில் புதிய படம் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,

Comments