வடக்கின் பல பிரதேசங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை | தினகரன் வாரமஞ்சரி

வடக்கின் பல பிரதேசங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 51பேருக்கு, மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் (19) தடை உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் அதிகார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக முல்லைத்தீவு, முள்ளியவளை மற்றும் வவுனியா பொலிஸ் பிரிவுகளிலும், சிலருக்கு மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன.

யாழ்ப்பாணத்திலும் மாவீரர் தின நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளது.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் (20)  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள  இராணுவத்தின் 512பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் தினத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த மனு  யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நிதவான்  வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நேற்று  21 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நடத்த தடை உத்தரவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

Comments