ஒட்டாத ஊரில்... | தினகரன் வாரமஞ்சரி

ஒட்டாத ஊரில்...

லண்டனில்  பனி பொழிந்துகொண்டிருந்தது. தமிழர்களுக்கு பனி உவப்பானதாக இல்லாவிட்டாலும் அது பொழிவதை விடுவதாக இல்லை.

இராமநாதன் தனது வலது கையை கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்து படுத்திருந்தார். அவர் படுப்பதற்கு பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்க கூடாது என்று அவர் இப்பொழுது ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

லண்டனில் குளிரும் மழையும் காற்றும் பனியும் என்று காலநிலை அவரைப்பாடாய் படுத்துகிறது. வெள்ளைக்காரர் அடிக்கடி சொல்லும் பழமொழி சரியாய்த்தான் இருக்கிறது என்று அவர் நினைத்தார். மூன்று டபிள்யு களை நம்பக்கூடாதாம் இந்த லண்டனில். வைஃப்,வெதர்,வேக்... ஒன்றும் நிரந்தரமில்லை. அவருக்கு சிரிப்பு வந்தது.

சிலோனை விட்டு லண்டனுக்கு வந்த நாளில் இருந்து ஏதாவது ஒரு நோய் அவரை பிடித்துக்கொண்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

காற்று அதிகமாக  அடித்தால் தொண்டை காய்ந்து தொண்டை கரகரப்பு,மழைபெய்தால் தும்மல்.குளிர் வந்தால் இழுப்பு,வெயில் வந்தால் தலைவலி

ஊர் பிறந்த வெள்ளைக்காரருக்கு இந்த நாடு ஒத்துப்போகும். ஆனால் தன்னைப்போல வந்தான் வரத்தான்களுக்கு பெரும் பிரச்சனைதான் என்று நினைத்துக் கொள்வார்.

 மார்கழி மாதத்தில் இராமநாதன் லண்டனில் வந்து இறங்கினார். வந்த கையோடு இரண்டு கைகளிலும் தோல் உரிந்து போனது. உடம்பெங்கும் செதில் செதிலாக தோல் உதிர்ந்தது. அது இங்கை வாற எல்லாருக்கும் வருகிற ஒன்று தான் என்று மகன் அலட்சியப்படுத்தி விட்டார்.

லண்டன் தமிழர்களுக்கு, இரண்டாவது தேசம்போல் ஆகி விட்டாலும்  எல்லாம் அன்னியமாகவே அவர் உணர்ந்தார்.மகன் லண்டனுக்கு அவரை கூப்பிடப்போறான் என்றவுடனேயே அவரது ஊர் புளியங்குளத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை.

இனி என்ன இராமநாதன்  லண்டன் சீமைக்கு போய் வாழப்போறாராமே  என்று அவரது வயதையொத்தவர்கள் அவரது காது படவே பேசியபோது அவருக்கு மனம் முழுக்க பெருமையாக இருந்தது.

அவர் படுத்திருந்த கட்டில் மெத்தையில் உள்ள கம்பியொன்று வெளியே துருத்திக்கொண்டிருந்தது. காலில் குத்தி விடுமோ என்று அவர் பயந்து கொண்டிருந்தார். மகனிடன் சொல்லி ஒரு மாதமாகி விட்டது. புது மெத்தை ஒன்று வாங்கித்தரும்படி அவர் மகனிடம் கேட்டிருந்தார். மகன் ஓம் வாங்கித்தாறன் என்று சொன்னவர்  இன்னும் வாங்கிக் கொடுக்கவில்லை.

நான்கு அறை கொண்ட பெரிய வீட்டுக்கு மகன் சொந்தக்காரன். அதுவும் லண்டன் சிற்றியில் இருக்கிறது வீடு. மகன்; ஐந்து பெற்றோல் நிலையங்களுக்கும்  சொந்தக்காரன்.

நான்கு அறை வீட்டில் ஒரு அறையில் மகளும் மருமகனும் அடுத்த அறையில் ஒரு பிள்ளை. மற்றைய அறையில் மற்ற பிள்ளை. பொக்ஸ் றூம் இராமநாதனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இங்கு லண்டனில் பொக்ஸ்றூம் என்றால் ஒரு சிறிய கட்டில் போட்டு ஏறி படுக்க இறங்க மட்டும் போதுமானதாக இருக்கும் அவ்வளவுதான். அப்பாவுக்கு அது போதும் என்று மகன் நினைத்து விட்டார் போலும். இராமநாதனுக்கு அந்த அறையைப்போல மனதும் இட்டுமுட்டாகவே இருக்கிறது.

வளர்ந்த பேரப்பிள்ளைகள் அவரோடு ஒட்டுகிறார்களில்லை.

ஹாய் தாத்தா என்பதோடு சரி  அவரவர் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள். அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியாது. அவருக்கு ஆங்கிலம் வராது.

தான் ஊரில் இருந்த வாழ்க்கையை யோசித்து யோசித்து மனம் வெதும்பிக்கொண்டிருந்தார். மனைவி உயிரோடு இருந்நதிருந்தால் தான் இங்கே வந்திருக்க மாட்டார். அவரும் மனைவியும் சேர்ந்து தனக்குவந்த விவசாய வருமானத்தில் பிள்ளைகள் இரண்டையும் வளர்க்க பெரும்பாடுபட்டதை அவர் இப்பொழுது நினைத்து கொண்டார்.1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் அங்கு வாழவே பயமாய் இருக்க மகனை 1985ஜனவரியில் லண்டனுக்கு அனுப்பி வைத்தார் மகள் மட்டக்களப்பில் கலியாணம் முடித்து இருக்கிறாள்.

'அப்பா உதிலை சும்மா படுத்திருக்காமல் உங்கை கொமினிட்டி சென்டரிலை வயதானவைக்கு ஸ்பீச் எல்லாம் வைக்கினமாம் போட்டு வாங்கோ''. மகன் சொல்லி விட்டு காரை எடுத்துக்கொண்டு போய் விட்டார். போற தெருவிலை அப்பாவை இறக்கி விட்டு போகலாம் என்ற நினைப்பு கூட மகனுக்கு வராமல் போய் விட்டது.

ஒவ்வொரு நிமிடமும் பணம் பற்றிய யோசனைதான அவர்களுக்கு. மகன் சொன்னதும் கொமினிட்டி சென்டருக்கு போவது நல்ல யோசனையாகவே அவருக்கு இருந்தது.

கொமினிட்டி சென்டர்கள்தான் இங்கு வயதாளிகளுக்கு ஆதரவு. இந்த சென்டர்கள் இல்லாவிட்டால் சிலோனில் இருந்து வந்த வயதாளிகளில் அரைவாசிப்பேருக்கு பொழுதுபோக்கு இல்லாமல் மூளை குழம்பியிருக்கும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் இங்கு எழுத்தில்தான் இருக்கிறது. வெள்ளைக்கார நாட்டில் ஒரு ஒழுங்கு வைத்துள்ளார்கள். அறுபத்தாறு வயதுவரை உழைத்தவர்கள் பென்சன் எடுத்துவிட்டு வீட்டில் இருக்கலாம். அவர்களுக்கு உழைப்பின்போது சம்பளத்தில் வெட்டிய வரிகள் பணம் எல்லாம் மாதாமாதம் பிரித்து கொடுப்பார்கள். ஆகவும் உடம்புக்கு முடியாவிட்டால் போய் வயோதிபர் இல்லத்தில் இருக்கலாம்.

மகன், மகள்மார் எல்லாம் ஃபாதர்ஸ்டே , மதர்ஸ்டே, பிறந்தநாள் என்று மட்டும் வந்து பார்த்துவிட்டு போய் விடுவார்கள். வெள்ளைக்கார வயோதிபர்களுக்கும் இது பழகிப்போன விஷயம். ஆனால் தமிழ் பெற்றொர்கள் பிள்ளைகளை பெற்று வளர்ப்பதே பிற்காலத்தில் பிள்ளைகள் தங்களுக்கு உதவி செய்வார்கள் என்ற எண்ணத்தில்தான் தமிழ் பிள்ளைகள் தங்களது வயதான பெற்றோரை ஊரில் இருந்து கூப்பிட்டு வைத்து பார்க்கிறார்கள்தான். ஆனால் அதுதான் வயதாளிகளுக்கு பெரும் வேதனையாகி விடுகிறது.

கொமினிட்டி சென்டரில் இருபது இருபத்தைந்து முதியவர்கள் இருந்தார்கள். இன்று மன அழுத்தம் தொடர்பாக பேசுவதற்கு டொக்டர் சசி வருவதாக அறிவிப்பு எழுதி இருந்தார்கள். இன்றுதான் முதன் முதலில் இராமநாதன் இந்த சென்டருக்கு வந்திருந்தார். அறிமகமில்லாத ஒருவர் அவருக்கு அருகில் வந்து அமர்த்தார்.

"என்ரை பேர்  செல்லையா நீங்கள்''

"நான் இராமநாதன்''

"ஊரிலை எவ்விடம்''

"புளியங்குளம'

"புளியங்குளம் என்றால்'

"ஒட்டுசுட்டான் புளியங்குளம்''

"இங்கை ஆரோடை இருக்கிறியள்?.'

"மகனோடை"

"நீங்கள்?"

"மகளோடை"

சொல்லும்போது செல்லையாவின் கண்கள் பனித்தன. இராமநாதனுக்கு என்னவோ போலிருந்தது.

"ஏன் சுகமில்லையே?"

"இல்லை கவலைதான். ஊரை விட்டுட்டு வந்து யாரும் இல்லாதவர்கள் போல அலைகிறோமே'' செல்லையா துக்கித்தது இராமநாதனுக்கும் மனதுக்கு அந்தரமாக இருந்தது. பேரப்பிள்ளைகள் கவனிக்குதுகள் இல்லை. இஞ்சை பிறந்ததாலை அவையள் நினைக்கினம் தாங்கள் வெள்ளைக்காரர் எண்டு. எங்கடை தமிழ் சமூகம் எங்களோடை அழிஞ்சுபோயிடுமோ எண்டு கவலையாய் கிடக்கு. என்றார் செல்லையா.

"ஏன் அப்பிடி நினைக்கிறியள்?" இராமநாதன் கேட்டார்.

"இல்லை ராமநாதன் என்னுடைய மகள் டொக்டர். மருமகன் பல் வைத்தியர். அவையளுக்கு ஒரே ஒரு பொம்பிளை பிள்ளை. இப்பதான் பதினைந்து வயது. அவள் வெள்ளைக்கார போய் ஃபிரண்டை வைத்திருக்கிறாள். நான் பேத்தி எண்டு ஒண்டையுமே சொல்லமுடியாமல் இருக்கு.

நேரம் காலமில்லாமல் போய் ஃபிரண்டோடு சுத்திக்கொண்டு திரியுறாள். அவள் என்ரை ரத்தம். என்ரை பேத்தி. எனக்கு எந்த உரிமையும் இல்லை அவளை கேகக்குறதுக்கு. இது ஊரிலை என்டால் இப்பிடி நடக்குமே?''அவர் கண் கலங்கினார்.

அடுத்த தலைமுறை தமிழ் சமூகத்தை விட்டு விட்டு போய் விடுமோ என்ற பயம் வயதாளிகளிடம் வந்து விட்டது. ஜேர்மனி, கனடா, லண்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஹொலன்ட் பெல்ஜியம் என்று எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. பாடசாலை, பப் கலாச்சாரம் என்று எங்கடை இளந்தலைமுறையினரை கட்டுப்படுத்த முடியாமல் போய்கொண்டிருக்கிறது. கேட்டால் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உரத்து சொல்கிறார்கள்.

இதுதான் வெள்ளைக்கார கலாசாரம், வெள்ளைக்கார நாட்டிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். வயதாளிகளை ஒன்றும்தெரியாத பட்டிக்காடு என்று இளம் பிள்ளைகள். நினைக்கிறார்கள்."

கொமினிட்டி சென்டரில் மாலையில் தேனீரும் பிஸ்கட்டும் வாழைப்பழமும் கொடுத்தார்கள்.

ஒவ்வொருவரும் வந்து தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்கள். அனேகமாக எல்லோரின் முகம்களிலும் பிறந்த பூமியை விட்டு விட்டு ஏன் வந்தோம் என்ற கவலை அப்பிக்கிடந்தது. ஊரில் என்றால் கூப்பிட்ட குரலுக்கு யாராவது ஓடி வருவார்கள் . இங்கு பக்கத்து வீட்டுக்காரர் என்ன நிறம் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

"இப்படித்தான் போன திங்கட்கிழமை என்னுடைய பேத்தி தனது போய்ஃபிரண்டோடு வீட்டுக்கு வந்தாள்.வந்து அவனையும் கூட்டிக்கொண்டு தனது றூமுக்கு போனவள் ஐந்து மணித்தியாலத்திற்கு பிறகுதான் வெளியிலை வந்தினம்." இராமநாதன் செல்லையாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

"அப்ப நீங்கள் மகளிட்டை பேசேல்லையே" இந்த விசயம் பற்றி சொல்லேல்லையே

"கேட்டனான் கேட்காமல் விடுவனே.."

"மகள் என்ன சொன்னவா?"

"அதைக்கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீங்கள்.

இங்கை பிள்ளைகளை கேள்வி கேட்க கூடாதாம். கேட்டால் பிள்ளைகள் வீட்டை விட்டு போய் விடுவினமாம்."

"அப்ப சின்னப்பிள்ளைகள் ஆணும் பெண்ணும் என்னவும் செய்யலாமோ?"

"இங்கை சுதந்திரமாம் தனி மனித சுதந்திரமாம் எதுவும் பேச முடியாதாம்."

இராமநாதனுக்கு தூக்கி வாரிப்போட்டது. தனக்கும் இரண்டு பேரப்பிள்ளைகள் இருப்பதை நினைத்துக்கொண்டார்.  எங்களுடைய கலாசாரம் தமிழர் வாழ்வு கோவில் குளங்கள் என்று எதனையும் காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவர் மனதில்  ஓடிக்கொண்டிருந்தது.

வெள்ளைக்கார நாட்டில் அவர்களுடைய கலாசாரத்தோடுதான் வாழ வேண்டும் என்று எமது பிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள். அவர்கள் இங்கு பார்ப்பது பழகுவது எல்லாம் அதுதானே. பெற்றோர்கள் தமிழர் கலாசாரத்தை பின் பற்றவைக்க படாத பாடு படுகிறார்கள். தமிழ் பிள்ளைகள் தமிழை மறந்து விட்டார்கள்.

கோவில்கள் ஒவ்வொரு இடத்திலும் வந்து விட்டன.இங்கு லண்டனில் கோவில் திருவிழாக்களில் வெள்ளைக்காரர்கள் பட்டு வேட்டி அணிகிறார்கள். வெள்ளைக்கார பெண்கள் சாரி அணிந்து வருகிறார்கள். பிரதான வீதிகளில் தேர் இழுத்து தேங்காய் உடைக்கிறார்கள். எங்கள் தமிழ் சாப்பாட்டை வெள்ளைக்காரர்கள் விரும்பி சாப்பாட்டு கடைகளில் சாப்பிடுகிறார்கள். ஆனால் எங்கள் பிள்ளைகள் வெள்ளைக்கார கலாசாரம் தான் சரி அதனை விட்டு விட்டு வர முடியாது என்று அடம் பிடிக்கிறார்கள்.

இராமநாதன் மனச்சோர்வோடு அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த கதிரைகளில் ஒன்றில் உட்கார்ந்தார்.

டொக்டர் சசி  அன்னியநாடு,புரியாத மொழி,பிள்ளைகளின் ஒதுக்குதல், பேரப்பிள்ளைகளின் அன்னியத்தனம், காலநிலை ஒவ்வாமை, பேசுவதற்கு யாருமற்ற நிலை எல்லாம் சேர்ந்து இங்குள்ள வயதாளிகளை பாடாய் படுத்தும் விதம் பற்றி  பேசிக்கொண்டிருக்கும் பொழுது அனேகமாக எல்லா வயதாளிகளும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

பேச்சு முடிந்ததும் கொமினிட்டி சென்டரை விட்டு குடையை பிடித்துக்கொண்டு வெளியில் வந்தார் அவர்

பஸ் தரிப்பிடத்தில் வெள்ளைக்கார வயதான தம்பதிகள் கைகளை பிடித்துக்கொண்டு நடந்து போனார்கள். சற்று தள்ளி இளம் ஆண்கள் இரண்டு பேர் முத்தமிட்டுக்கொண்டு நின்றார்கள். அவர்களை பார்த்தபோது இந்த வெள்ளைக்கார நாட்டில் எப்படி நாங்கள் தமிழ் பிள்ளைகளை பாதுகாப்பது என்று நினைத்தார் இராமநாதன்.

ஒரு வீடு அதனை சுற்றி மூன்று ஏக்கர் காணி என்று புளியங்குளத்தில் வாழ்ந்த வாழ்க்கை என்ன? இந்த லண்டன் வாழ்க்கை என்ன என மனது சலித்துக்கொண்டது அவருக்கு.  

இந்த இழவை விட்டு விட்டு தமிழர்கள் எல்லோரும் ஊரோடை போய் வாழ்ந்தால் எப்பிடி இருக்கும். மனதில் நினைக்கும்போதே அவருக்கு பேருவகையாக இருந்த்து.

237ஆம் நம்பர் பஸ் வந்து நின்றது. அதில் ஏறி தனது டிக்கட்டை மெசினில் காட்டினார். கீக் என்ற சத்த்த்தோடு மெசின் அவருக்கு வழி விட்டது.

வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாருமே இல்லை. மருமகள் சமைத்து வைத்திருப்பாள் என்று சமையலறைக்குள் போய் பார்த்தார் அங்கு உணவு இல்லை. தானாகவே தேனீரை போட்டு எடுத்துக்கொண்டு பிஸ்கட்டோடு தொட்டு சாப்பிட்டார். அந்தப்பெரிய வீட்டில் யாருமற்ற அனாதையாக உணர்ந்தார்.  என்றுமில்லாதவாறு மின்னல் வெட்டியது.

தமிழ் டி வி யை போட்டார். யாரோ ஒருவர் உப்பு சப்பில்லாமல் பேட்டி கண்டுகொண்டிருந்தார். இங்கு தமிழ் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் தமிழர்களை அனியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டு தங்களது வியாபாரத்தை  செய்கின்றன.

இங்கு இருப்பதை விட ஊருக்கு போய் நிம்மதியாக அந்த மண்ணில் மூச்சு விடுவதே மேல் என்று நினைத்தார் இராமநாதன். அனேகமாக எல்லா தமிழ் வயதானவர்களும் நினைப்பதைதான் இராமநாதனும் நினைத்தார்.

இங்கு இயந்திரமயமான மனிதர்கள் மத்தியில் வாழ முடியாது. காலமை சாப்பாடில்லை. பகல் சாப்பாடில்லை.இரவு சாப்பாடு இரவு பதினொரு மணிக்கு. என்ன உலகமெடா இது? எல்லோரும் காலில் சக்கரத்தை பூட்டிக்கொண்டு ஓடித்திரிகிறார்கள்.

இரவு சாப்பாட்டை மருமகள் கடையில் இருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்தார். சாப்பாட்டு மேசையில் சாப்பாடு கிடந்தது. இராமநாதன்  சாப்பாட்டு மேசைக்கு கிட்ட போனார்.

"வாங்கோ இருங்கோ அப்பா" மகன் கதிரை ஒன்றை இழுத்துப்போட்டார். மருமகளும் பிள்ளைகளும் அவரை பார்த்தார்கள்.

"தம்பி நான் ஊருக்கு போகப்போறன்."

"ஏன் அப்பா?" மகன்' மட்டும்தான் கேட்டார். மருமகளும் பேரப் பிள்ளைகளும் தங்களுக்கு சம்பந்தம் இல்லாததுபோல சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவர் இருந்தாலும் ஒன்றுதான் போனாலும் ஒன்றுதான். ஏனெனில் அப்படித்தான் இவ்வளவு நாளும் கழிந்தது. அவரைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் வீட்டில் இருக்கிறார் அவ்வளவுதான். பாசம் செத்துப்போய் விட்டதை இராமநாதன் தெளிவாகவே உணர்ந்தார். வெளிநாட்டு வாழ்க்கை அவ்வாறு ஆக்கி விட்டிருந்தது.

"இல்லைத்தம்பி இங்கை தனிய என்னாலை இருக்க முடியாது. நீ  மகன் எண்டு உன்ரை வீட்டிலை இருந்தாலும் நான் தனியத்தான் இருக்கிறன்.''

அப்பப்பா என்ன சொல்கிறார் என்று புரிய கூட பேரப்பிள்ளைகளால் முடியவில்லை. அவர்களுக்கு தமிழ் தெரியாது.

"இங்கை இப்பிடித்தான் அப்பா வாழ்க்கை எல்லாம். நானும் மனிசியும் வேலைக்கு போக வேணும். போனால்தான் இந்த பெரிய சொகுசான வீட்டுக்கு மோர்கேஜ் கட்டவேணும். சமூகத்திலை எனக்கு எண்டு ஒரு அந்தஸ்த்து இருக்கு அதனை பாதுகாக்க வேணும்.பெரிய வாகனம் பெரிய வாழ்க்கை வேணுமெண்டால் உழைக்க வேணும்."

"ஆனால் நிம்மதி இல்லையே தம்பி.எல்லாரும் காசு காசு எண்டு அலையுறீங்கள். எப்ப ஒண்டாய் இருந்து நிம்மதியாக அன்பாக பேசி சாப்பிட்டு மனதாறி சந்தோசப்பட்டிருக்கிறீங்கள் சொல்லுங்கோ?''

மருமகள் மாமா சொல்வதை பார்த்துக்கொண்டிருந்தாவே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை. அவவுக்கு சொல்ல வேண்டிய தேவை எதுவும் இருக்கவில்லை. பேரப்பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு எழும்பி போய் விட்டார்கள்.

"இப்படி உழைச்சு மட்டும் என்னத்தை காணப்போறியள்.?கொஞ்ச காலத்திலை களைச்சு போயிடுவீங்கள். எங்கடை தமிழர் வாழ்க்கை இப்பிடி ஆகீட்டுதே.?"  பெரு மூச்சு விட்டார் இராமநாதன்

"அப்பா எல்லாருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை இப்பிடித்தானே இருக்கு. அதை ஒண்டும் செய்ய முடியாது.''

"அதுதான் தம்பி என்னாலை இங்கை இருக்க முடியாது.எனக்கு ஊருக்கு டிக்கட்டை போடு. எவ்வளவு கெதியா போட முடியுமோ அவ்வளவு கெதியா போடு. நான் ஊரோடை போகப்போறன்.''

அப்பாவின் நிலமை மகனுக்கு விளங்கி விட்டது. அவரை இங்கு இனி வைத்திருக்க முடியாது.

"இங்கையுள்ள எங்கடை தமிழாக்களை நினைச்சால் தான் கவலையாக இருக்கு தம்பி. ஊரிலையும் வாழ்வு இல்லாமல் இங்கையும் வாழ்வு இல்லாமல் கிடந்து அலையுதுகள்.''

மகன் சாப்பிட்டு முடித்து விட்டு கொம்பியூட்டரை தட்டிப்பார்த்தார். அடுத்த வாரமே கொழும்புக்கு விமான டிக்கட் இருந்தது.

இராமநாதன் பொக்ஸ் றூமுக்குள் போய் படுத்துக்கொண்டார். உடலெல்லாம் வலித்தது. கட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தை சில இடங்களில் அழுத்தியது.

மனது ஊரை நினைத்துக்கொண்டாலும் அவர் தனது பேரப்பிள்ளைகளை நினைத்தார். ஊரில் இதுகள் பிறந்திருந்தால் என்ன பாசத்தோடு அப்பப்பா என்று தனது மடிக்குள்ளேயே கிடந்திருக்குங்கள். அந்த கொடுப்பினை இல்லாத பாவி என்று தன்னை நொந்து கொண்டார்.

பக்கத்து பெரிய அறையில் சத்தமாக டி வி பார்த்துக் கொண்டிருந்தார்கள் பேரப்பிள்ளைகள்.  அவர்களின் தலையை தடவி அன்பாக அவர்களோடு பேசவேண்டும் போல இருந்தது. தனது பேரக்குஞ்சுகள் அப்பப்பாவுக்கு கிட்ட வரவே மாட்டன் என்கிறார்கள். அவருக்கு அழுகை அழுகையாக வந்த்து.  உறவுகள் தொலைந்து அன்னியமாகி போய் விட்டன. பாசம் செத்துப்போய் விட்டது.

இனிமேல் ஊருக்கும் இங்கும் ஒட்டுதல் கிடையாது. அதனை நினைத்துப்பார்க்க முடியாது. அடுத்த தலைமுறை ஊரை மறந்து விட்டது.

"அப்பா அடுத்த திங்கட் கிழமை இரவு 9.30இற்கு கொழும்புக்கு டிக்கட் புக் பண்ணிப்போட்டன்."

மகன் சொல்லி விட்டு போனார். இன்னும் ஒரு வாரம் இந்த ஒட்டாத ஊரில் இருந்த தொலைக்க வேண்டுமே. மனது கனத்த்து.

இளைய அப்துல்லாஹ்
(லண்டன்)

Comments