சீனாவின் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ இந்தியாவிடம் பலிக்கப் போவதில்லை! | தினகரன் வாரமஞ்சரி

சீனாவின் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ இந்தியாவிடம் பலிக்கப் போவதில்லை!

இரு வருட கால கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலாத்துறை உட்பட இலங்கைக்கான தேசிய வருமானம்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வருகின்ற பணவீக்கம், தொடர்ந்து குறைந்து வரும் வெளிநாட்டு இருப்புகள், டொலர்பற்றாக்குறை என பல காரணிகளுக்குமத்தியில் இலங்கை பொருளாதாரநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி, அரசியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை மாத்திரமன்றி பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நாடுகளில் விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டு இருப்புகள் சரிவு என்பது பொதுவான விஷயங்களாக இருந்தாலும், அதனையும் தாண்டி  ஒரு பொதுவான விஷயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. அதுதான் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டம்.

இந்த மூன்று நாடுகளின் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் சீனா என்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டம்தான் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென அவர்கள் கூறுகின்றனர்.

‘சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம்’ என்று இத்திட்டத்தை பொருளாதார வல்லநர்கள் குறிப்பிடுகின்றனர். உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்து சீனா தனது பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் தந்திரத்தைக் கையாள்கின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். சீனாவின் இந்த திட்டத்தின் கீழ் பல நாடுகள் பொருளாதார சரிவை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2013ஆம் ஆண்டில் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்தத் திட்டத்தின் நோக்கம் மேற்கு நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை மேம்படுத்துவதே என்றும் கூறப்பட்டது.   

‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் மூலம், உலக நாடுகள் பலவற்றையும் தங்கள் நாட்டுடன் சீனா இணைக்கும். இதன் மூலம் வீதிப்  போக்குவரத்தினை அண்டை நாடுகளுடன் மேம்படுத்தும். கப்பல் போக்குவரத்தினையும் மேம்படுத்தி சீனாவின் துறைமுகங்களை உலக நாடுகளுடன் இணைக்கும். பொதுவாக சொல்ல வேண்டுமெனில் சீனாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வீதி மார்க்கம் என அனைத்துத் தரப்பினையும் அண்டை நாடுகளுடன் சீனா இணைத்துக் கொள்ளும்.

இதன் மூலம் உலக நாடுகள் எளிதில் தங்களது சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் சீனா பல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என நம்புவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சீனாவின் அறிக்கை வேறுவிதமாக இருக்கின்றது.  இந்தத் திட்டத்தில் தனக்கு எந்தத் தனிப்பட்ட நோக்கமும் கிடையாது என சீனா கூறி வருகின்றது. உலகளாவிய நாடுகள் மேம்படும் போது, அதில் சீனாவும் மேம்படும் என்றும் அந்நாடு கூறி வருகின்றது. ஆனால் இதன் பின்னணியில் சீனாவின் இராஜதந்திரம் இருக்குமோ என்ற அச்சம் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு இருந்து வருகின்றது.

இந்தத்  திட்டத்தினை செயல்படுத்த அண்டை நாடுகளுக்கு கடன் கொடுப்பதாகவும் சீனா தெரிவித்தது. ஆனால் இதற்காக அண்டை நாடுகள் தங்கப் பத்திர உத்தரவாதத்தில் கையெழுத்திட வேண்டும். உதாரணத்திற்கு பாகிஸ்தானுக்கு ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்திற்கு பெரும் தொகைக் கடனாக வழங்கப்பட்டது.

இதேபோல இந்தத் திட்டத்தில் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் வழியாக மேற்கு நோக்கியும், மலேசியா, ஹொங்கொங், வட கொரியா என கிழக்கு நோக்கியும், இலங்கை வழியாக தெற்கிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்திற்கு கடன் மட்டும் அல்ல, தேவையான தொழில்நுட்பங்கள், மனித வளங்கள் என அனைத்தும் தருவதாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் இது குறித்தான ஒப்பந்தங்கள் எதுவும் வெளிப்படையாக இல்லை என்பதே அண்டை நாடுகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதில் வட்டி வீதமும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தில்தான் 70நாடுகள் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. ஒருபுறம் இதன் மூலம் உலகளாவிய வணிகத்தை மேம்படுத்த முடியும் என்றாலும், அமெரிக்காவும், இந்தியாவும் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதனை அமெரிக்கா ‘கடன் பொறி இராஜதந்திரம்’ என்று வர்ணித்து வருகிறது. ஏனெனில் இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக கடனை கொடுத்து, கடனை கட்ட முடியாமல் தவிக்கும் போது அந்த நாட்டின் வளங்களை பெற்றுக் கொள்ளும் செயல் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் வறிய நாடுகளை கடன் வலையில் விழ வைத்து அதன் மூலம் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் எனவும் கருதப்படுகிறது.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் 2020ஆம் ஆண்டு, ஒரு கூட்டத்தில் சீனாவின் இராஜதந்திரம் பற்றி பேசியிருந்தார். “வளர்ச்சி கூட்டாண்மை என்ற பெயரில் நாடுகள் சார்பு கூட்டாண்மைக்கு தள்ளப்பட்டுள்ளதை வரலாறு நமக்கு கற்பித்துள்ளது” என அவர் கூறியிருந்தார்.

இதேவேளை இலங்கை தனது கடனை திரும்பச் செலுத்துவதில் எந்த சலுகையையும் சீனா வழங்க மறுத்து விட்டது. சீனாவுக்கான மொத்த கடன் வீதம் 8பில்லியன் டொலராகும். இது இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் ஆறில் ஒரு பங்காகும் என்ற தகவலும் உள்ளது. சீனா கடனை மறுசீரமைப்பு செய்யவில்லை.

பாகிஸ்தானிலும் இதே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானில் ‘ பெல்ட் அண்ட் ரோட்’  திட்டத்திற்காக 27.3பில்லியன் டொலர்கள் கடனுதவியை சீனா வழங்கியுள்ளது. ஏற்கனவே கடன் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானில், கொரோனா இன்னும் நிலைமையை மோசமாக்கியிருந்தது. தற்போது அங்கு அரசியல் பிரச்சினை நிலவுகின்றது.

மொத்தத்தில் இதுபோன்ற பல நாடுகளில் தனது திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது சீனா. இவற்றில் லாவோஸ், ஜாம்பியா, கிர்கிஸ்தான் உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றில் 13,000இற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, சுமார் 843பில்லியன் டொலர் கடன் திட்டங்களை ஆய்வு செய்துள்ளதாகவும், இதனை 165நாடுகளில் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இவற்றில் கவனிக்கதக்க ஒரு விஷயம் என்னவெனில் நேபாளத்தில் ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.  நேபாளம் இதுவரையில் கடன் பிரச்சினையில் பெரிதாகச் சிக்கவில்லை. மானிய உதவிகளின் மூலம் திட்டங்களை தேடுவதாக நேபாளம் தெரிவித்துள்ளது. அத்தோடு கடன் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அப்படியே கடன் வாங்கினாலும் அதற்கு 2%மேலாக வட்டி இருக்கக் கூடாது என்றும் நேபாளம் கூறியுள்ளது. அதேபோல திரும்பச் செலுத்தும் காலமும் ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கி வழங்கும் அவகாசத்தைப் போல் இருக்க வேண்டும் என நேபாளம் கோரியுள்ளது.

ஆனால் நேபாளத்துக்கு இந்த முடிவு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக நேபாளில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 14.7%குறைந்துள்ளது. அதே போல முன்னறிவிப்பு எதுவும் இன்று சமீபத்தில் நேபாளில் முற்றுகை நடவடிக்கையை சீனா முன்னெடுத்தது. இதற்கிடையில் ‘கொரோனா தடுப்பு நடவடிக்கை’ என்பதன் பேரில், நேபாளத்தின் வர்த்தகர்களுக்கு சீனா தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நேபாளத்தை வணிக ரீதியாக ஒடுக்கும் நடவடிக்கையில் மறைமுகமாக சீனா ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவை இவ்வாறிருக்க  இந்தியா தற்சார்பு இந்தியாவினை வலுப்படுத்த விரும்புகிறது. அதற்காக நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. எனினும் அண்டை நாடான இலங்கையிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றது. நேபாளத்துக்கும் உதவிகளை செய்து வருகின்றது. இவ்வாறான செயல்பாடுகளை கவனிக்கும் போது, இந்தியாவுக்கு எந்த மாதிரியான பிரச்சினையை சீனா கொடுக்கப் போகிறதோ என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.

எவ்வாறாக இருந்தாலும் சீனாவின் இராஜதந்திரம் இந்தியாவிடம் பலிக்கப் போவதில்லை என்பதே இந்திய பொருளாதார நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

சாரங்கன்

Comments