புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவோம் | தினகரன் வாரமஞ்சரி

புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவோம்

இறை அருளையும் பாவ விமோசனத்தையும் அடைய ரமழான் எனும் விஷேட மகத்துவமான மாதத்தை வழியனுப்பி வைத்து கவலையில் ஆழ்ந்த இறை விசுவாசிகளுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இறைவன் வழங்கிய மாண்பு மிக்க தினமே புனித நோன்புப் பெருநாள் தினமாகும்.

புனித ரமழான் மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதூகலமாக கொண்டாடுகின்றனர். ரமழானில் நன்மைகளைக் கொள்ளையிட்ட உள்ளங்கள் ஷவ்வால் மாத தலைப் பிறையுடன் ரமழானுக்கு விடை கொடுத்து விட்டு நோன்புப் பெருநாள் குதூகலத்தில் திளைக்கின்றன.

பெருநாள் தினம் என்பது சிறியோர், பெரியோர், ஏழை, பணக்காரன், முதியவர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடிய தினமாகும். இப்பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதை ஹராமாக்கியுள்ள இஸ்லாம் அல்லாஹ்வின் உவப்புக்குரிய வழிகளில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது.

பெருநாள் தினம் அல்லாஹ்வை ஞாபகமூட்டக் கூடிய, அவனைப் புகழக் கூடிய தினமாக இருக்க வேண்டுமே தவிர நற்செயல்களுக்கு மூட்டை கட்டும் தினமாக அமையலாகாது. ஈதுல் பித்ர் பெருநாளில் அதிகமானளவு நன்மைகளை செய்ய நாம் முன்வர வேண்டும். நாம் மட்டும் பெருநாளைக் கொண்டாட அயல் வீட்டார் பெருநாளைக் கொண்டாட வசதியற்றவனாக இருப்பாரேயானால் நாம் கொண்டாடும் பெருநாளில் என்ன தாற்பரியம் உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

நோன்புப் பெருநாளுக்கு ஒவ்வொரு முஸ்லிமும் தயாராகும் போது பித்ரா (தர்மம்) கொடுப்பதைக் கொண்டே தயாராக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நோன்புப் பெருநாள் தர்மம் நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் ஏழை, எளியவர்கள் பெருநாள் தினத்தில் பசி, பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கங்களின் அடிப்படையிலும் கடமையாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பெருநாள் தினம் தனித்துவமானதாகவும் முன்மாதிரியானதாகவும் அமைய வேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்லர். நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்தே வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்கக் கூடாது.

இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது.

வறிய மக்களின் துயர் துடைக்கும் பித்ரா என்ற கடமையுடன் பெருநாள் தொடங்குவதன் காரணமாகவே பித்ர் என்ற வார்த்தையுடன் சேர்ந்து ஈதுல் பித்ர் என்று இப்பெருநாள் அழைக்கப்படுகின்றது. பெருநாள் தினத்தில் இரவு, பகல் இரண்டு வேளைகளுக்கு தனக்கும் தனது பராமரிப்பிலுள்ள குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் போதுமான அத்தியாவசிய வாழ்க்கை வசதிகளையுடைய ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகைய வசதிகள் அற்ற அல்லது வசதிகள் குறைந்த ஏழைகளுக்கு கட்டாயமாகக் கொடுப்பதற்குரிய நன்கொடையே ஸகாதுல் பித்ர் எனப்படும்.

பெருநாள் தினத்தன்று சகல முஸ்லிம்களும் சந்தோஷமாக உண்டு மகிழ வேண்டும், எவரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற சமுதாய நோக்கு முதலாவதாகவும், பித்ராவை வழங்கும் ஒவ்வொருவரும் ரமழான் மாதத்தில் விட்ட பிழைகளுக்குப் பரிகாரமாகவும் ஸகாதுல் பித்ர் இருப்பதனால் நோன்பாளிகள் பரிசுத்தவான்களாக மாறுவதனால் தனியார்கள் நன்மை பெறுவது இரண்டாவது நோக்கமாகவும் திகழ்கின்றது.ஒவ்வொரு முஸ்லிமின் செயல்கள் மற்ற சகோதர முஸ்லிம்களின் சுகதுக்கங்களில் பங்குபற்றக் கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த உண்மையை ஸகாதுல் பித்ர் அமைப்பு முறையிலும் காணக்கூடியதாக உள்ளது. பெருநாள் தினத்தில் நாங்கள் எல்லோரும் அதிகாலையில் குளித்து, புத்தாடைகள் அணிந்து, நறுமணம் பூசி, அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்கின்றோம் அல்லவா? இதே போன்று அன்றைய தினத்தில் நாம் பின்பற்றி நடக்க வேண்டிய நபி வழியில் வந்த செயற்பாடுகளும் உண்டு.

இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் எமது பெருநாளின் சிறப்புக்களை மாற்று மத இனங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவ்வாறு நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ளும் போதுதான் இந்த நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்ப முடியும். ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார கொள்கைச் சுதந்திரங்களும் தொழில் நடவடிக்கைகளும் இன்னுமொருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்களில் ஒன்றாகும். அண்மைக்காலமாக நாம் கட்டிக்காத்து வந்த இன நல்லுறவுச் செயற்பாடுகள் பல்வேறு சிக்கல்களை. இன விரோதங்களை அரசியல் மட்டத்தில் ஏற்படுத்தி வருவதால் இப்பெருநாள் தினங்களில் மிக அவதானத்தோடும் பொறுப்புணர்வோடும் குரோதம், விரோதம் ஏற்படாத வகையில் புரிந்துணர்வையும் சக வாழ்வையும் இப்பெருநாள் ஏற்படுத்த அல்லாஹ் அருள் புரிவானாக.மேலும் இலங்கையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் பெரும்பான்மையினருடனும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுடனும் பிரச்சினைகளிலிருந்து நீங்கி சமாதானமும் சகவாழ்வும் இனங்களுக்கிடையே சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வும் ஏற்படவும் அல்லாஹ் அருள் புரிவானாக.மேலும் எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினை நீங்கவும் அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

கலாபூஷணம்

எம்.எப்.எம். இக்பால்

(ஜே.பி) யாழ்ப்பாணம்

Comments