மருந்தாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

மருந்தாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ்

ஏழு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, இலங்கையில் முதல் தர மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளரும் விநியோகத்தருமாக திகழும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், மருந்தாளுநர்களின் பிரத்தியேக திறன்கள் விருத்தி நிகழ்ச்சியை பூர்த்தி செய்த இரண்டாவது தொகுதியினருக்கு சான்றளிப்பு வைபவத்தை ஹில்டன் ரெசிடென்சிஸ் இல் அண்மையில் முன்னெடுத்திருந்தது. 35 மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று தமது திறன்களை விருத்தி செய்திருந்தனர். இலங்கை மருந்தாக்கல் சங்கத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநர்களுக்கு அவசியமான திறன்கள் மற்றும் அறிவைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

மருந்தாளுநர்களாக திகழ எதிர்பார்ப்பைக் கொண்ட மாணவர்களுக்கு பரிபூரண அறிவைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த மருந்தாளுநர்களின் பிரத்தியேக திறன்கள் விருத்தி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதிவு பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், இலங்கை மருந்தாக்கல் நிறுவனத்திடமிருந்து மருந்தாளுநர்கள் பதிவை பெற்றுக் கொள்வதற்கும் உதவும் வகையில் 6 மாத காலப்பகுதிக்கு இலவசமாக அவர்களை தயார்ப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இதனூடாக, தொழிற்துறைக்கும் சமூகத்துக்கும் தகைமை வாய்ந்த மருந்தாளுநர்கள் தயார்ப்படுத்தப்பட்டு சேவைக்கு அமர்த்தப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. இந்த கற்கையின் பாட விதானத்தில் சமூக மருந்துப் பொருட்கள் செயன்முறை, Pharmaceutics, Pharmacology மற்றும் Therapeutics, Pharmacy Management, Regulatory requirements, Pharmacognosy, Cold Chain Management மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை திறன்கள் போன்றன அடங்கியுள்ளன.

இந்தத் திட்டம் தொடர்பாக ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் ஹேமாஸ் சேர்ஜிகல்ஸ் மற்றும் டயக்னோஸ்டிக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜுட் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “மருந்தாளுநர்களின் பிரத்தியேக திறன்கள் விருத்தி நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுதியை பூர்த்தி செய்துள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆர்வமுள்ள மாணவர்களின் நலனுக்காகவும், நாம் சேவையாற்றும் சமூகத்துக்கு பயனைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கின்றேன். பொது மக்களுக்கு உயர் தரம் வாய்ந்த மருந்துப் பொருட்கள் விநியோக சேவையை மேற்கொள்வதில் மருந்தாளுநர்களை விருத்தி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. உயர் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் எப்போதும் முன்னணியில் திகழ்வதுடன், தொழிற்துறையின் முன்னிலையாளர்களை பயிற்றுவிப்பது எமது பொறுப்பாக அமைந்துள்ளது என நாம் கருதுகின்றோம்.” என்றார்.

Comments