கட்சி அரசியலுக்கான காலம் இதுவல்ல | தினகரன் வாரமஞ்சரி

கட்சி அரசியலுக்கான காலம் இதுவல்ல

ஒரு வர்த்தக நிறுவனமாகட்டும் அல்லது வாங்கியாகட்டும், அங்கே பணி புரிபவர்கள் அனைவருமே தத்தமது பணிகளில் தேர்ந்தவர்களாக இருந்தாலும் நிர்வாகங்கள் சிலரைத்தான் அடையாளம் கண்டு அவர்களிடம் முக்கிய விடயங்களை பொறுப்புக் கொடுக்கும் அல்லது முடிவெடுக்கச் சொல்லும், ஏனெனில் அவர்கள் தமது துறைகளை மட்டுமன்றி ஏனைய துறைகளின் நெளிவு சுழிவுகளையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.

இத்தகைய ஒரு பண்பை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவதானிக்கலாம். அவரது பணியாற்றும் முறை அலாதியானது. வெளிப்பூச்சியின்றி தெளிவாக தன் கருத்தை சொல்லக் கூடியவர். காரியத்தில் கண்ணாக இருப்பவர். மற்றவர்கள் தயங்கும் இடங்களில் இலாவகமாக புகுந்து புறப்படக் கூடியவர். இல்லையேல், தனியாளாக, அதுவும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தவரால், சரியான அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் பிரதமராகுவது சாத்தியப்பட்டிருக்காது. இதை சூழ்ச்சி என்றும் சிலர் அழைக்கலாம். ஆனால் நன்மை பயக்கக் கூடிய அரசியல் சூழ்ச்சி என்றைக்குமே வரவேற்கத்தக்கதாகவே இருந்திருக்கிறது. தனியொருவராக முன்வந்து நான் இப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் காட்டுகிறேன் என்று சவால்விடுவதோடு தான் ஏற்கனவே கூறிவந்த உபாயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு

24மணித்தியாலங்களுக்குள் தயாராகி விட்டதை சூழ்ச்சி என்றால் அது சூழ்ச்சியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

இலங்கையின் கடந்த நூறாண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்ததே இல்லை. இதற்கு கொவிட் தொற்று மட்டும் காரணமல்ல. நீண்டகாலமாக கைகொள்ளப்பட்டு வந்த கட்சி அரசியல் மற்றும் தேர்தல் அரசியலால் விளைந்த சேதங்களின், அரசியலை ஒரு வர்த்தகமாகப் பார்த்ததன் விளைவுகளின் மொத்த உருவமாகவே இப் பொருளாதார நெருக்கடியை கருத வேண்டும். தற்போது மீளாய்வு செய்வதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இந்த ஆபத்தில் இருந்து விடுபடுவதே முதலும் முக்கியமுமாகும்.அதற்கு அனைவரும் தயாரா? என்பதே கேள்வியாகும்.

ஒரு நாள் வாழ்க்கையை முன்னெடுப்பதே பெரும் பிரச்சினையாகியுள்ள இச் சமயத்தில் நாட்டைத் தூக்கி நிறுத்துவோம் என்ற கோஷத்துடன் முன்வந்திருப்போருக்கு கைகொடுப்பதா அல்லது அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியபடி அதில் குளிர்காய்ந்து மகிழ்வதா என்பதை அனைத்து பொறுப்புணர்வு கொண்ட மனிதர்களும், அரசியல்வாதிகளும் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அயல்நாட்டு தூதுவர்கள் அவரைச் சந்தித்து நிலைமைகள் குறித்து விரிவாக பேசியுள்ளனர். பிரதமரின் செய்தியை எடுத்துக் கொண்டு ஜப்பானுக்கு அந்நாட்டுத் தூதுவர் சென்றுள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் ஜே. ஆர். காலத்தில் பாரிஸ் நகரில் நடைபெற்று வந்தது. அதேபோன்ற ஒரு உதவி வழங்கும் நாடுகளின் சம்மேளனத்தைக் கூட்டும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வரும் இந் நடவடிக்கைகளின் விளைவாக டொலர் ஒரு ஸ்திரத்தையும், பங்கு சந்தை ஒரு ஸ்திர நிலையையும் உடனடி பச்சை

சமிக்ஞைகளாக வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஒரு தற்காலிக சமிக்ஞை என்றாலும் கூட, புதிய அரசின் மீதான உலகளாவிய நம்பிக்கையை மற்றும் வர்த்தக உலகின் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இச் சந்தர்ப்பத்தில் புதிய அரசின் செயற்பாடுகளுக்கு உதவும், ஊக்கமளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உள்ள தகுதிவாய்ந்த மற்றும் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த உறுப்பினர்கள் பிரதமருடன் அணிசேர வேண்டியது அவசியம். ஏனெனில் இது கட்சி அரசியல் பேசுவதற்கான நேரம் அல்ல. பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு கைகொடுக்க வேண்டிய காலம். பிரதமர் ரணில் எதைச் செய்வதில் ஈடுபட்டுள்ளாரோ அதற்கு கரம் கொடுப்பதே உண்மையான தேசப்பற்றாகும்.

Comments