இரண்டு கப்பல்களில் ரூ. 02 பில். பெறுமதியான பொருட்கள் | தினகரன் வாரமஞ்சரி

இரண்டு கப்பல்களில் ரூ. 02 பில். பெறுமதியான பொருட்கள்

துறைமுகத்தில் வைத்து தூதுவர் பாக்ேல கையளிப்பார்

இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மனிதாபிமான உதவித்தொகுதி இன்று 22ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.  

9,000மெற்றிக் தொன் அரிசி, 50மெற்றிக் தொன் பால் மா மற்றும் 25மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் உள்ளடங்கிய இத்தொகுதி, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படவுள்ளன.  

கடந்த18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000மெற்றிக் தொன் அரிசி, 500மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த பங்களிப்பானது 5.5பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடு முழுவதுமுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பல்வேறு அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் சமூக அமைப்புகள் பல தமது உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளன. இலங்கைக்காக இந்திய மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அபரிமிதமான இந்த ஆதரவு, இவ்வருடம் ஜனவரி முதல் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிக்கு மேலதிகமாக அமைகின்றது. 

Comments