எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயார் | தினகரன் வாரமஞ்சரி

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயார்

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன், எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. 

இதன் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் திடீரென அதிகரித்தது.  

இதன் காரணமாக நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் போராட்டம் வெடித்ததுடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையும் வலுபெற்றது. 

அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

நிலைமை இவ்வாறிருக்க, கடந்த 09ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 

இதனையடுத்து பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். மேலும், இந்த வன்முறையின் போது 10பேர் வரையில் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அத்துடன், ஏராளமான பஸ்களும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர கால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  

தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

இவ்வாறான பின்னணியிலேயே, இவ் வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments