கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளில் ஈடுபடும் மண் மாபியாக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு 0764482667, 0771966429, 0775538710, 0766774024ஆகிய நான்கு தொலைபேசி இலக்கங்களிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வந்த கரைச்சி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் நந்தகுமாரின் வீடும் நேற்று முன்தினம் இரவு மணல் மாபியாக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேதமாக்கப்பட்ட வீட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளதையடுத்தே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.