பா.ஜ.கவின் 'சமத்துவ இந்தியா' கொள்கைக்கு கிடைத்த வெற்றி | தினகரன் வாரமஞ்சரி

பா.ஜ.கவின் 'சமத்துவ இந்தியா' கொள்கைக்கு கிடைத்த வெற்றி

பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவாரியானவாக்கு மதிப்புகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 15- ஆவது குடியரசுத் தலைவராகியிருக்கிறார். இந்த வெற்றியின்மூலம், `இந்தியாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவதுகுடியரசுத் தலைவர்’ என்ற புகழையும் அவர் அடைந்திருக்கிறார்.

இந்த வெற்றியானது பல கோணங்களிலும் நோக்கக் கூடியதாகும். பா.ஜ.கவின் அரசியல் செல்வாக்குக்குக் கிடைத்த பெருவெற்றி இதுவென்பது முதலில் நோக்கக் கூடியதாகும். அதாவது பா.ஜ.கவினால் முன்மொழியப்பட்ட வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமானோர் வாக்களித்துள்ளனர். பா.ஜ.கவுக்கு எதிரான கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இத்தேர்தலில் திரௌபதி முர்வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜ.க மீதான அபிமானம் மற்றும் முர்மு மீதான நம்பிக்ைக ஆகியனவே அவர்களின் தீர்மானத்துக்கான காரணம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் செல்வாக்கானது  இந்தியாவின் அனைத்துக் கட்சிகளின் மத்தியிலும் பரவிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரௌபதி முர்மு இந்தியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஆவார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அனைத்துப் பிரிவினரையும் சமமாக போற்றி மதிக்கக் கூடிய தலைவரென்பதையும் இத்தேர்தல் முடிவு புலப்படுத்துவதாக உள்ளது. பா.ஜ.க என்பது ஒட்டுமொத்த இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி என்பதை பிரதமர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவராக பதவி ஏற்றிருக்கும் இவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நாட்டின் 2- ஆவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

பதவியேற்ற பிறகு பேசிய அவர், "நாட்டின் குடியரசுத் தலைவராக முதல் பழங்குடி இனப் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காகப் பணியாற்றுவேன். இந்தப் புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்குப் பெரும் பலமாக இருக்கும். சாதாரண கவுன்சிலராகத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் மகத்துவம்.

ஏழை வீட்டில் மகளாகப் பிறந்த நான், நாட்டின் குடியரசுத் தலைவர் ஆக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். இந்த நேரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

"கொரோனா காலகட்டத்தில் உலகத்துக்கே இந்தியா பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, பாரதத்தைக் கட்டி எழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காகப் பணியாற்றுவேன்" என்றார் முர்மு.

கிராமத்துச் சூழலில் பிறந்து வாழ்ந்த திரௌபதி முர்முவின் வாழ்வு வியப்பூட்டவல்லது. ஒரிசா பழங்குடிகள் பாடசாலையில் 7- ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார் திரௌபதி. அப்போது அந்தக் கிராமத்தில் இருந்து பாடசாலையில் படிக்கும் ஒரே பெண்ணாக அவர் இருந்துள்ளார். நன்கு படித்த திரௌபதி அடுத்து புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்துள்ளார். சிறுவயது முதல் துணிச்சலுடன் பேசி எதையும் தைரியமாக அணுகும் வழக்கம் அவருக்கு உண்டு. அதே காலகட்டத்தில் புவனேஸ்வரின் மற்றொரு கல்லூரியில் படித்தவர் ஷியாம் சரண். இவருக்கு திரௌபதியை மிகவும் பிடித்து விட்டது.

படிப்பை முடித்து விட்டு வங்கி பணியில் சேர்ந்தார் ஷியாம். ஒரு நாள் திரௌபதியின் உபர்பேடா கிராமத்து வீட்டுக்கு உறவினர்கள் சிலருடன் பெண் கேட்டுச் சென்றுள்ளார். அவர்களது காதல் விவகாரத்தை கேள்விப்பட்ட திரௌபதியின் தந்தை பிரஞ்சி நாராயண் துடு, மிகவும் கோபப்பட்டார்.

ஷியாமுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கவும் மறுத்து விட்டார்.

ஆனால், சிறிதும் கவலைப்படாத இளைஞர் ஷியாம், அந்தக் கிராமத்திலேயே 3தினங்கள் உறவினர்களுடன் தங்கி விட்டார். கிராமத்தின் மூத்த குடிகளை சந்தித்து தனது நோக்கத்தை எடுத்துரைத்துள்ளார்.

அதேசமயம், ஷியாமைத் தவிர வேறு எவரையும் மணமுடிப்பதில்லை என திரௌபதியும் உறுதியாக இருந்துள்ளார். இதனால் மனம் இறங்கிய தந்தை நாராயண்துடு, திருமணத்துக்கு சம்மதித்துள்ளார்.

ஒரிசாவின் பழங்குடிகள் முறைப்படி பெண் வீட்டார் திருமணத்துக்கு பின் சீர் செய்து அனுப்ப வேண்டும். இதை மாப்பிள்ளை வீட்டாருடன் கலந்து பேசி முடிவு எடுப்பது வழக்கம். அதன்படி, திரௌபதிக்கு ஒரு எருமை மற்றும் பசுவுடன் 16சோடி உடைகளையும் அவரது தந்தை வழங்கினார். கடந்த 1980இ-ல் நடைபெற்ற அவர்களின் திருமணத்துக்கு பிறகு திரௌபதி துடு என்றிருந்த பெயர், திரௌபதி முர்மு என்று மாறியது.

அத்தம்பதியருக்கு 2குழந்தைகள் பிறந்தன. லக்ஷ்மண், ஷிபுன் ஆகிய இருவருமே பிள்ளைகள். கணவர் பெயர் ஷியாம். இம்மூவரும் சில ஆண்டுகள் இடைவெளியில் அடுத்தடுத்து இறந்துவிட அவர்களது நினைவால் திரௌபதி முர்மு மிகவும் வாடியுள்ளார். மூவரின் நினைவாக தனது கணவரின் பஹார்பூர் கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தில் ஒரு பாடசாலையை கடந்த 2016இல் அமைத்தார். அதற்கு ஷியாம், லஷ்மண், ஷிபுன் ஆகிய 3பெயர்களின் முதல் எழுத்தை வைத்து 'எஸ்.எல்.எஸ்.பள்ளி' என்று பெயரிட்டார்.

திரௌபதி முர்முவின் கிராமமான பஹார்பூரில் திருமணமான சுமார் 125குடிகள் உள்ளன. சுமார் 400வாக்காளர்களைக் கொண்ட இக்கிராமத்தில் திரௌபதியின் சந்தாலி மற்றும் முண்டா சமூகப் பழங்குடிகள் வாழ்கின்றனர்.

ராய்ரங்பூரின் உபர்பேடா கிராமத்தில் தாம் பயின்ற பாடசாலையிலேயே திரௌபதி ஆசிரியராக சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு ‘ஸ்ரீஅரபிந்தோ இன்டகரல் எடியுகேஷன் சென்டர்’ கல்வி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி செய்துள்ளார்.

அப்போது திரௌபதி நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத் துறையில் இலிகிதர் பணியும் செய்துள்ளார். அதன் பிறகுதான் 1997- இல் நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். தனது குடும்பத்தின் சோக நிகழ்வுக்கு பின்னர் சைவ உணவுக்கு மாறிவிட்ட திரௌபதி, இஞ்சி மற்றும் வெங்காயம் கூட உணவில் சேர்ப்பதில்லை.

ராய்ரங்பூரில் குறைந்த மின் ஒளியுடன் தனது வீட்டில் பூசை அறையை வைத்துள்ளார் திரௌபதி. இதனுள் விஷ்ணு, லஷ்மி, குழந்தை கிருஷ்ணன் மற்றும் பிரம்மகுமாரியின் படங்களை வைத்துள்ளார். திரௌபதியின் உபர்பேடா கிராமத்தில் சுமார் 6,000பேர் வசிக்கின்றனர்.

இங்குள்ள திரௌபதியின் தந்தை நாராயண் துடுவின் வீடு ஒன்றுதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் தற்போது திரௌபதியின் 2சகோதரர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கிராமத்தில் இருந்து 25கி.மீ தொலைவில் உள்ள ராய்ரங்பூருக்கு ஆற்றைக் கடந்து செல்வது சிரமமாக இருந்துள்ளது. 2003- இல் திரௌபதியின் முயற்சியில் அதில் ஒரு பாலம் அமைந்த பின்னர் பிரச்சினை தீர்ந்துள்ளது.

சாதாரண கிராமத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்த திரௌபதியின் உண்மையான பெயர் புதி முர்மு.

இவர் பாடசாலையில் பயிலும் போது அவரது சமூகத்தை சேர்ந்தவரும், மற்றொரு மாவட்டத்தில் பணியாற்றி வந்தவருமான ஒரு பெண் ஆசிரியர்தான் திரௌபதி என்ற பெயரைச் சூட்டியுள்ளார். பின்னர் அதுவே நிலைத்து விட்டது. இந்தத் தகவலை திரௌபதியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார் அவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பதிவையும் பதித்திருக்கிறார்.

எஸ்.சாரங்கன்

Comments