பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவோம் | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவோம்

பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்ததெனவும் அதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையிலிருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவையென்றும் தெரிவித்தார்.

துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம்  தயாரென்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான ஆலோசனைக்கு மதிப்பளித்ததற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சர்வகட்சி அரசாங்கத்துக்கு தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

சர்வகட்சி ஆட்சிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட 11ஆலோசனைகள் அடங்கிய வேலைத்திட்டமும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments