செல்வாக்குமிக்க உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்த காரணம்! | தினகரன் வாரமஞ்சரி

செல்வாக்குமிக்க உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்த காரணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது உலகநாடுகள்பலவற்றின் மக்களுக்கு அதிகஈர்ப்பு உள்ளது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவருவதற்கு நரேந்திர மோடிசெயற்படுத்தி வருகின்ற முற்போக்கான திட்டங்களேஇதற்குப் பிரதான் காரணம் ஆகும்.

உலகெங்கும் கொவிட் தொற்று பேரிடர் நிலவிய போதிலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்திருக்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பிரித்தானியாவையும் முந்தியபடி இந்தியா  உலகில் 5ஆவது இடத்துக்கு வந்து விட்டமை சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பதில் சந்தேகமில்லை. அவர் வகுத்துள்ள நவீன திட்டங்களாலேயே உலக அரங்கில் இந்தியா ஐந்தாவது இடத்துக்கு வந்திருக்கின்றது. நரேந்திர மோடியின் திட்டங்கள் உலகளவில் பாராட்டுப் பெற்றுள்ளன. நவீன இந்தியாவின் உருவாக்கத்துக்கு நரேந்திர மோடியின் திட்டங்களே வழிவகுத்துள்ளன.

இது ஒருபுறமிருக்க, பிரபல்யம் மிக்க உலகத் தலைவர்கள் தொடர்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட மதிப்பீட்டாய்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் முதலாமிடம் கிடைக்கப் பெற்றுள்ளது.'மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜன்ட்' என்ற அமைப்பு நடத்திய சர்வதேச ஆய்விலேயே நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரபல்யம் மிக்க உலகத் தலைவர்களில் அதிகூடிய 75வீத மதிப்பீடு அவருக்குக் கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு முதலிடம் பிடித்தார்? இதற்கான காரணமும் இப்போது வெளியாகி உள்ளது.

சென்னை டிவிஎஸ் எமரால்ட் ஹோம்ஸின் பிரம்மாண்ட பண்டிகை கால தள்ளுபடி

'மோர்னிங் கன்சல்ட்' எனும் அரசியல் உளவு நிறுவனம் பல்வேறு தரவுகள் குறித்த விபரங்களை வழங்கி வருகிறது. இதற்காக அவ்வப்போது அந்த நிறுவனம் உலகம் முழுவதும் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்டத ஓகஸ்ட் 17முதல் ஓகஸ்ட் 23வரை ஒவ்வொரு நாட்டில் உள்ள தலைவர்களுக்கும் அந்த நாட்டில் உள்ள தலைவர்களுக்கான செல்வாக்கு தொடர்பாக 'மோர்னிங் கன்சல்ட்' எனும் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவிலேயே பிரதமர் மோடியின் செல்வாக்கு உச்சத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் 75சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2022ஜனவரி மற்றும் 2021நவம்பரில் வெளியான பட்டியலிலும் முதலிடம் பிடித்த நரேந்திர மோடி தற்போது 3ஆவது முறையாக மீண்டும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் உலகளவில் செல்வாக்கு மிகுந்த தலைவராகவும் நரேந்திர மோடி மாறியுள்ளார்.

மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் அண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 2ஆவது இடத்தில் உள்ளார். 3ஆவது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி உள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோ 4ஆம் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5ஆவது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 6ஆவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 7ஆவது இடத்திலும் உள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 8ஆவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்படி முதலிடம் பிடித்தார் என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனா பரவலை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். குறிப்பாக உலக மக்கள்தொகையில் 2ஆவது இடத்தில் இருந்தாலும் அவரது செயல்பாட்டை மக்கள் அதிகமாக பாராட்டி நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் 72சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சரியான திசைக்கு அழைத்து செல்கிறார் என கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். கொரோனா காலத்தில் உலக நாடுகள் அதிக சிரமத்தை சந்தித்தாலும் கூட பிரதமர் மோடி அரசு சரியான வகையில் செயல்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த கணிப்பீட்டின்படி தினமும் 20ஆயிரம் பேரிடம் கருத்துப் பெறப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அரங்கில் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க குரல் உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் குரலையும் நிலைப்பாட்டையும் உலகத் தலைவர்கள் மதிப்பதற்கு நரேந்திர மோடியே காரணமாவார்.

வெளிப்படையாக இந்தியா உலக அரங்கில் நம்ப முடியாத முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நாடு ஆகும். உலகில் மிகவும் கொந்தளிப்பு நிலவி வரும் இன்றைய நிலையில், இந்தியாவுடனான உலகின் நல்லெண்ணம் வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. உலகம் நவீனத்தை நோக்கி முன்னேறுகின்றது. இந்த மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவை கொண்டு செல்லக் கூடிய தலைவராக நரேந்திர மோடி திகழ்வதாக உலகத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உலகில் மாறிவரும் சவால்கள் மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய புதிய செயற்றிட்டங்களை நரேந்திர மோடி செயற்படுத்தி வருகின்றார்.  அதேவேளை ஏனைய நாடுகளுடன் இந்தியா பேணி வருகின்ற நல்லுறவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

எஸ்.சாரங்கன்

Comments