மாற்றங்களைத் தரும் புதிய பயணத்தை தொடர்வோம் | தினகரன் வாரமஞ்சரி

மாற்றங்களைத் தரும் புதிய பயணத்தை தொடர்வோம்

பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ்

பிறந்திருக்கும் தைப்பொங்கலில், சகல மக்களின் வாழ்விலும் மாற்றம் தரும் நீடித்த மகிழ்வான வாழ்வு மலரட்டுமென ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

பொங்கல் வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, "தைப்பொங்கல் திருநாள் தொன்று தொட்ட தமிழர் பண்பாட்டு பெருநாள். உழுதுண்டு வாழும் உழவர் மக்கள் காலந்தோறும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள். தமது வாழ்வுயர வழிவகுத்த சூரியனுக்கு நன்றி செலுத்துவது போல்,..

தமது வாழ்வெங்கும் மலர்ந்தும் மறையாத மாசற்ற ஒளிச்சுடராக நின்று, இருள் சூழ்ந்த இடர் பூமியிலிருந்து நடைமுறை சாத்தியமான பாதையில் தம்மை விடிவை நோக்கி அழைத்து செல்பவர்களுக்கும் தமிழ் மக்கள் முழுமையான நன்றியை செலுத்த முன்வரவேண்டும்.

அரசியல் அதிகாரங்களை மக்கள் நலன் சார்ந்து சரிவரப் பயன்படுத்தவும், முன்னோக்கி செல்லவும் வல்லமை உள்ளவர்களுக்கு வலிமை சேர்ப்பதே நாமார்க்கும் அடிமையல்லோம் எமனை அஞ்சோம், நரகத்தில் இடர்படோம் என நிமிர்ந்தெழும் காலத்திற்கு வழி சமைக்கும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற எமது மக்களின் நம்பிக்கைகள் நிறைவேறி வருகின்றன.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என தொடங்கும் புதுவாழ்வு நோக்கி பயணிக்கும் மதினுட்ப சிந்தனையே இன்று வெற்றி பெற்று வருகிறது, நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வருவதையே வரலாறு இன்று மீண்டும் ஏற்றுக்கொண்டு வருகின்றது,

வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும், உழைக்கும் மக்களின் வாழ்வுயர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும். உறவுகளை இழந்து தவிக்கும் எமது மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் வேண்டும்.

பிறக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதி எங்கும் ஓங்க வேண்டும். இவைகளை நோக்கி பயணிப்போம்.

நேற்று என்பது உடைந்த பானை,.. நாளை என்பது மதில் மேல் பூனை!இன்று என்பது கையிலுள்ள வீணை!!! இன்றே விழித்திருப்போம்,.. நல்லதே நடக்கும் நாளை என்ற நம்பிக்கையோடு இன்று பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்" இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Comments