ரோம் ஐ.நா முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் மெக்கெய்ன் இன்று இலங்கை வருகை | தினகரன் வாரமஞ்சரி

ரோம் ஐ.நா முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் மெக்கெய்ன் இன்று இலங்கை வருகை

இத்தாலியின் ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன் இன்று 25ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.  

அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.  

இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் உணவு உதவித் திட்டங்களை கவனம் செலுத்துவதற்காகவும், இலங்கையின் நலன்கள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் இலங்கையுடனான நீடித்த பங்காண்மை ஆகியவற்றை மீளவலியுறுத்துவதற்காகவுமே இவர் இலங்கை வரவுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.  

கொழும்பிலுள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்திப்பதற்கு மேலதிகமாக, தூதுவர் மெக்கெய்ன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு விஜயம் செய்து அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்கள் ஊடாக நிவாரணம் பெற்றவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துபவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.  

அமெரிக்கா, உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகிய ஐக்கிய நாடுகளின் மூன்று உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் மிகப்பெரிய தனிநாட்டு நன்கொடையாளராகும்.  அமெரிக்காவினால் நிதியளிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் செயற்திட்டங்கள், குறிப்பாக உலகளவில் பட்டினி அதிகரித்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைப்பதற்கும், மனிதாபிமான நிவாரணம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றுவதற்கும், அமெரிக்க அரசாங்கம், ஐ.நா உணவு மற்றும் விவசாய முகவரமைப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன எவ்வாறு இணைந்து பணியாற்றுகின்றன.  

அமெரிக்கா, இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் 70 வருடங்களுக்கும் மேலாக பங்காண்மையையும் உதவிகளையும் வழங்கியுள்ளது. இலங்கை விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்காக மேலதிக 40 மில்லியன் டொலர்கள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 20 மில்லியன் டொலர்கள் போன்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் செப்டம்பர் மாதத்தில் மேற்கொண்ட அறிவிப்புக்கள் உட்பட, ஜூன் மாதம் முதல், இலங்கைக்கான அமெரிக்க அரசாங்கத்தின் புதிய உதவிகளாக கிட்டத்தட்ட 240 மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்படுவதை தூதுவர் சங் கண்காணித்து வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

Comments