பாவனையாளர்கள் மீது சுமைக்கு மேல் சுமையேற்றும் மலையக பலசரக்கு கடைகள் | தினகரன் வாரமஞ்சரி

பாவனையாளர்கள் மீது சுமைக்கு மேல் சுமையேற்றும் மலையக பலசரக்கு கடைகள்

தற்போது நாடளாவிய ரீதியில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. நாட்டின் ஜனத்தொகைக்கு ஏற்ப உள்நாட்டு பால்மா உற்பத்தி 40 சதவீதம் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாகவும் எஞ்சிய 60 சதவீதம் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா மூலமாகவே இதுவரை காலமும் நிறைவு செய்து வருவதாக அமைச்சரொருவர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைகள் மற்றும் பால்மா இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நாட்டு மக்கள் தமக்கு தேவையான பால்மா இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் அனேகமாக சிறுவர்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர். பால்மா தட்டுப்பாட்டால் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெளிநாட்டு இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பால்மா இறக்குமதியாளர்களின் வினியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட வகையில் பால் பாக்கெட்டுகளை வர்த்தகர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இதனால் நுகர்வோரின் தேவை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பால்மா இறக்குமதி செய்து வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் வித்தியாசமான சில சூழ்ச்சிகளை செய்து நுகர்வோருக்கு கொண்டு செல்கின்றனர்.

குறிப்பாக அங்கர் பால்மா பக்கெட்டுக்ககளை கொள்வனவு செய்யவரும் வாடிக்கையாளர் குறித்த பால்மாவுடன் இணைக்கப்பட்டுள்ள சமபோஷ பைக்கட்டுகள் - அங்கர், மைலோ பால் பைக்கற்றுகள் அல்லது என்லின் பைக்கட் ஒன்றையும் சேர்த்து கொள்வனவு செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலையிலும் பார்க்க இரண்டரை, - மூன்று மடங்கு விலைகளை செலுத்தியே தமக்கு தேவையான பால்மா பக்கெட்டை கொள்வனவு செய்ய வேண்டிள்ளனர். சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படாத பொருட்களை இவ்வாறு இணைத்து விற்பனை செய்ய முயல்வது வர்த்தகர்களா, விநியோகஸ்தர்களா அல்லது இறக்குமதியாளர்களா என நுகர்வோர் கேள்வியெழுப்புகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தலவாக்கலை, லிந்துலை, பத்தனை, போகஹவத்த ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் பால்மா பைக்கட் ஒன்றின் விலை மட்டும் இருமடங்காக விற்பனை செய்வதோடு சமையல் எரிவாயு (12.5 kg ) ஒன்றின் விலை 2,500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான வியாபார நிலையங்களில் நகரத்திலும் பார்க்க பல மடங்கு அதிகரித்த விலையிலேயே பொருட்களை விற்பனை செய்து வருவதன் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் சீனி, பால்மா, சமையல் எரிவாயு போன்ற பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவிவரும் நிலையில் பல பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளது.

எனவே மாவட்டத்தில் இடம்பெறும் பொருள் தட்டுப்பாடுகள், அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும்போது இன்னொரு பொருளை இணைத்து விற்பனை செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.

லிந்துலை நிருபர்

Comments