சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை கொண்டு செல்ல இடமளிக்க வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை கொண்டு செல்ல இடமளிக்க வேண்டாம்

நாட்டில் மீண்டும் இருண்ட யுகமொன்று வரவேண்டுமா என்பதைப் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். மனித உயிர்களின் பெறுமதி தெரியாதவர்கள் 2015வரை தேசத்தை எப்படி வழிநடத்தினார்கள் என்பதையும் பின்னோக்கியப் பார்க்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கொழும்பு காலி முகத்திடலில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் வேண்டு கோள்விடுத்தார்.

நவம்பர் 16ஆம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்து தீர்மானம் எடுக்க வேண்டிய நாளாகும் துப்பாக்கிக் கலாசாரத்தின் பக்கம் தேசத்தை தள்ளுவதா அல்லது செழிப்பு மிக்கதான ஜனநாயக மாண்பை பாதுகாப்பதற்கு இணைவதா என்பதை தீர்மானிக்க வேண்டும். அன்று அரச பயங்கரவாதம் தலை விரித்தாடியதை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பில் ராஜபக்ச குடும்பம் மக்களை நாடி வந்துள்ளது எனவும் சஜித் பிரேமதாஸ இங்கு தெரிவித்தார்.

நான் மக்களோடு இணைந்திருப்பது புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்காகும். நாட்டின் எதிர்காலத்தை மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமுள்ளதாக மாற்றுவதற்கு நாங்கள் முன்வந்துள்ளோம். ஜனாதிபதியாக வந்து முடி கூடிக்கொள்வதல்ல எனது நிலைப்பாடு மக்களோடு மக்களாகவே என்னையும் இணைத்துக் கொண்டு மக்கள் சேவைக்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவே முன்வந்துள்ளேன்.

இந்த ஜனாதிபதி தேர்தல் என்னைப் பொறுத்தவரையில் ஒரு சவாலாகவே தெரியவில்லை. இங்கு கூடியிருக்கும்மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக நவம்பர் 17 ஆம் திகதி விடியும் போது,நானே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பேன். கடந்த கால ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் இன்னமும் மறக்கவில்லையென்பதை இங்கு எனக்கு நன்றாகத்தெரிகிறது. எனது வாழ்க்கையில் தவறுகள் நடந்ததென்பது எனக்குத் தெரியாது. அப்படியேதாவது நடந்திருந்தாலும் அதோடு சம்பந்தப்பட்டவரைத் தேடிச்சென்று அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பேன். எதிர்த்தரப்பினர் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை இந்த நாட்டு மக்கள் நம்பத் தயாராகவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனது தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தந்தை வழியில் எனது பயணத்தை ஆரம்பித்திருக்கின்றேன்.இந்த நாட்டுக்கு குடும்ப ஆட்சியா? மிலிட்டரி அதிகாரியா? அடிப்படைவாத தலைவனா? தேவையென்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். மீண்டுமொருதடவை சர்வாதிகாரததின் பக்கம் நாட்டை கொண்டுசெல்லஇடமளிக்க முடியாது. வரலாற்று பெருமைமிக்க ஜனாதிபதியாக நிச்சயமாக நான் வெற்றியடைவேன். புதிய யுகத்தில் புதிய சிந்தனையுடன் எமது பயணம் தொடரும்.உலகை வெல்லவேண்டுமென்பதே எனது அபிலாஷையாகும். இலங்கை உலகிலேயே அதிசிறந்த நாடாக புகழப்படவேண்டும்.அதற்காக நாங்கள் எல்லோரும் இன, மத, மொழி பேதம் கடந்து ஒன்றுபடவேண்டும். ஒரு தனிமனிதனுக்காக எதையும் தாரைவார்க்க நாங்கள் தயாராகவில்லை. மனிதநேயம் கொண்ட எமது நாட்டில் அனைத்து மக்களும் ஒரே பிரஜைகளாக வாழவேண்டுமென்பதே எனது நோக்கம். நான் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாகவிருந்தால் ஒன்றுபட்ட மக்கள் சக்தி மிக முக்கியமானது. உலக சந்தையை எமது கைகளுக்குள் கொண்டுவரவேண்டும். அது இலகுவான காரியமல்ல. எமது வளங்களை சரியானமுறையில் பயன்படுத்தினால் அந்த உச்ச நிலைக்கு எம்மால் வரமுடியும்.அந்த இலச்சியத்தை அடைவதற்கு யார் அதிகாரத்துக்கு வரவேண்டுமென்ற தீர்மானத்தை நீங்கள் எடுக்கவேண்டும். தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 30 வருடகால யுத்தத்தில் எமது தேசத்தை பாதுகாத்த பெருமை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே சாரும். அந்த அடிப்படையில்தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பை நான் அவரிடமே கையளிப்பேன். யுத்தமென்ற வார்த்தையைவிட போதைப்பொருள் பாவனை, இனக்குரோதங்களை தூண்டிவிடுதல் இவற்றையெல்லாம் தடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. தண்டிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட்டேயாவார்கள்.இதில் நான் இனம், மதம், மொழி பார்க்கமாட்டேன். நீதியை நிலைநாட்டுவதற்கு நான் உத்தரவாதமளிப்பேன்.அபிவிருத்தித் திட்டங்களை உள்ளபடியே தொடர்ந்து முன்னெடுப்பேன். ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை. நேர்மையாக நடப்பவர்களுக்கும் திறமையுள்ளவர்களுக்கும் நிச்சயம் வாய்ப்பளிப்பேன்.என்னிடமிருந்து குறுகிய இலாபம் தேடும் நோக்கில் யாராவது இருந்தால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமுடியும். முடியாது, இல்லை என்ற வார்த்தைகள் எனது அகராதியில் கிடையாது.ஆம் முடியும் என்ற மனஉறுதியுடன்தான் எனது தந்தை காட்டிய வழியில் பயணிப்பேன்.

திறமையான படித்த இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பேன். புதிய சிந்தனையுடன் இளைஞர்களை அணிதிரட்டி இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுப்பேன்.

நாட்டின் சனத்தொகையில் 51 வீதத்தை தாண்டியவர்கள் பெண்களாவர். பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பிரதம நீதியரசராகவும் பதவி வகித்த பெருமை எமது நாட்டு பெண்களுக்குரியதாகும்.

அவர்களுக்கு உரிய இடத்தை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். பெண்களுக்குரிய விசேடமான சாசனம் ஒற்றைத் தயாரித்து உடன்படிக்கையொன்றை செய்வேன். அதேபோன்று விவசாயிகளுக்கும் விவசாய சாசனமொன்றை உருவாக்கி அவர்களுடனும் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வேன். விவசாயிகளை ஏமாற்றும் பொய் உத்தரவாதங்களை நான் ஒருபோதும் வழங்கப்போவதில்லை. வறுமையொழிப்பு, சமுர்த்தி ஊக்குவிப்பு, உழைக்கும் வர்க்கத்திற்கான ஆதரவு என்னிடமிருந்து தாராளமாக கிடைக்கும். வறுமைக் கோட்டிலிருந்து நாட்டை முற்றுமுழுதாக விடுவிப்பதே எனது நோக்கம். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். நானொரு பௌத்தனாக இருக்கலாம். பௌத்தத்துக்குத்தான் முன்னுரிமை. அதுவும் உண்மைதான். ஆனால், நாட்டை ஆட்சிசெய்யும் போது, இனம், மதம், மொழி கடந்து அந்தந்த சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவதமளிக்கின்றேன். நாட்டில் இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டியது மிக அவசியமாகும்.எனது இந்தப் பயணம் முற்போக்கான பயணமாகும். எல்லோரையும் அணைத்துக் கொண்டே பயணிக்க விரும்புகின்றேன். இன்று மக்களாட்சியை கொண்டுவரப் போவதாகக் கூறுகின்றவர்கள், கீத் நொயர், லசந்த விக்கிரமதுங்க, எக்னொலிகொட போன்றவர்களுக்கு என்ன நடந்ததென்று நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ரத்துபஸ்வலவில் தண்ணீர் கேட்டவர்களுக்கு எதிராக ரி-56 பயன்படுத்தியதை மறக்கமுடியுமா? இவ்வாறு நிறையவே சொல்லலாம். ஆனால், 16 ஆம் திகதி நீங்கள் கொடுக்கும் தீர்ப்பிலேயே நாட்டின் எதிர்காலம்தங்கியிருக்கிறது. என்றும் அவர் தெரிவித்தார்.  

எம்.ஏ.எம். நிலாம்

Comments