நாட்டை உருவாக்க சந்தர்ப்பம் தாருங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை உருவாக்க சந்தர்ப்பம் தாருங்கள்

அநேகமான நாடுகளில் அறிவை முதன்மையாகக் கொண்ட பொருளாதாரமே காணப்படுவதாகவும் இந்நாட்டு இளைஞர்களின் பங்களிப்பை பெற்று அவ்வாறான பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்காக உயர் கல்வியின் மூலம் இளைஞர் சமுதாயத்தை வலுவாக்கவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.  

கந்தளாய் பாதியகம மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு இடமளிக்கவில்லை. நாம் பயங்கரவாதிகளுக்காக பாதுகாப்பு பிரிவினருக்கு பயிற்சியளித்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளை நியமித்தோம். இந்த அரசாங்கம் அதனை மாற்றியது. அதனால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியது. அன்றை புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கே.பீ.யை கூட இலங்கைக்கு அழைத்துவர முடிந்தது. வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டிருந்த வேளையிலும் அதனை அரசால் தடுக்க முடியாமற் போனது. அதேபோல் அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலை திட்டங்களினால் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டது. நாம் நல்ல முதலீடுகளை செய்தோம். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டது. அதனுடன் இணைந்த 4இலட்சம் வேலைவாய்ப்புகளும் இல்லாமற் போயின. அன்று மஹிந்த ராஜபக்ஷவை ஏளனப்படுத்தி மத்தல விமான நிலையத்தை நெற் களஞ்சியசாலையாக மாற்றினார்கள். நாம் எமது கொள்கைகளை முன்வைத்துள்ளோம். திட்டங்களை அறிவித்துள்ளோம். விசேடமாக நாம் நமது கொள்கையில் விவசாயத்துக்கு பாரிய இடத்தை அளித்துள்ளோம். நாட்டை அரிசியினால் தன்னிறைவு செய்ய வேண்டும். விவசாயியை பாதுகாக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நாம் உரமானியம் வழங்குவோம். விவசாயிகளின் கடனை இரத்துச் செய்வோம்.  

“விவசாய காப்புறுதி முறையொன்றை, ஓய்வூதிய முறையொன்றை முன்வைத்துள்ளோம். நெற் பயிர்ச்செய்கை மாத்திரமல்ல விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு தேசிய விவசாயம் குறித்த புரிந்துணர்வு இல்லை. நாம் சிறப்பான கொள்கைகள் மூலம் விவசாயத்தை விஞ்ஞான தொழில்நுட்பத்தை உபயோகித்து நீர் முகாமைத்தும், உர முகாமைத்துவம், விதைக்கான அரச தலையீட்டுடனான திட்டமொன்றை நாம் முன்வைத்துள்ளோம். நாம் விவசாயியை தொழில் முனைவோனாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.  

மஹிந்த ராஜபக்ஷ மீன்பிடி துறையை மேம்படுத்த திட்டமொன்றை தயாரித்திருந்தார். நாம் மேலும் மீன்பிடி துறையை பாதுகாக்க திட்டமொன்றை தயாரிக்கவுள்ளோம்.  

“இந்த அரசாங்கம் முப்படைகளினதும் மற்றும் பொலிஸாரினதும் மனநிலையை பாதிப்படைய செய்துள்ளது. அவர்களது கௌரவத்தை குலைத்துள்ளார்கள். கிராம பாதுகாப்பு அதிகாரிகளை திணைக்களமாக்கினோம். அவர்களின் சீருடைகளை மாற்றினோம். யுத்த சமயத்தில் இராணுவத்தளபதி மேலும் நாலாயிரம் பேர் இராணுவத்திற்கு தேவை என கூறினார். உடனடியாக அவர்களை நியமிக்க முடியாது போனபோது சிவில் பாதுகாப்பு படையணியொன்றை அச்சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொடுத்தோம். புலனாய்வு பிரிவை அழித்தார்கள். நாம் புலனாய்வு பிரிவை பயங்கரவாதத்தை தோற்கடிக்க உபயோகித்தோம். இவர்கள் அவர்களை அரசியல் கைம்பொம்மைகளாக்கினார்கள். இன்று பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரிகள் அவர்களின் பிரச்சினைகளை முன்வைத்துள்ளார்கள். அவற்றை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்போம். நாம் புலனாய்வு பிரிவினை நாட்டின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்துவோம்.  

“நாட்டில் இளைஞர் சமுதாயம் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் பேரளவில் உயர் தரத்துக்கு தோற்றுகின்றார்கள். அதில் நூற்றுக்கு முப்பது வீதமானோரே பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றார்கள். நாம் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொடுக்க திட்டமொன்றை தயாரிப்போம்.

அநேகமான நாடுகளில் அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமே காணப்படுகின்றது. அதனால் இது சிறந்தவொரு சந்தர்ப்பமாகும். நீங்கள் என்னை நம்புங்கள். நான் அன்று பாதுகாப்பு செயலாளராக நடவடிக்கையில் ஈடுபட்டேன். அதனை நான் சரியாக நிறைவேற்றினேன். அதன் பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பதவி வகித்தேன். நான் கொழும்பு நகரை திருத்தினேன். நான் எனது பொறுப்பை சரியாக நிறைவேற்றுவேன்.

உங்களுக்கு பாதுகாப்பான நாடொன்று, கௌரவமான நாடொன்று, உங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலமுள்ள தேசமொன்றுக்காக உங்கள் பெறுமதி வாய்ந்த வாக்குகளை பாவித்து மொட்டு கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள்.     

Comments