ஓட விரட்டுவோம் | தினகரன் வாரமஞ்சரி

ஓட விரட்டுவோம்

சி உடம்புக்காரி

ஊருக்குள் உள் நுழைந்து

ஊசி போடுகிறாளாம்

அழையா விருந்தாளிய வந்து

அனைவரினதும் உதிரத்தை

உறிஞ்சி எடுத்துவிட்டு

அத்தனை பேரினதும் நித்திரையையும்

கலைத்து விட்டு நிம்மதியையும்

குலைக்கிறாளாம்!

கரு நிறத்தாள்

வெண் புள்ளிச் சேலையுடன்

வீட்டுக்குள் உள் நுழைந்தால்

விரட்டுவதிலே குறியாய் இருக்க வேண்டுமே!

வந்தவள் குந்திவிட்டால் எம்மையே

விரட்டி அடிப்பாள் பரலோகத்திற்கே!

பகலிலும் விடிகாலைப் பொழுதிலும் தானாம் இவளின்

பரவச நாடகமாம்! – நம் அக்கம்

பக்கத்து துப்பரவினை நித்தம் பாராமல் – நாம்

தூக்கம் கொண்டு விட்டால்

பௌயமாக இவள் வந்து நம்

பக்கத்திலே அமர்ந்து விடுவாளாம்!

ஈட்ஸ், ஈஜிப்ட்

ஈட்ஸ், அல்போடிக்டல்

என்ற பெயருடைய

பெண்ணாளே இப்படி

அழகாக ஊருக்குள்

உலா வருகிறாளாம்!

இவள் வந்து எமக்கு

ஊசி போட்டால்

ஊசலாடும் எம் உயிரே!

எலும்பு முறிக் காய்ச்சலுடன்

உடல் வலியும் அரிப்பும்

கடுமையான தலை வலியும்

கண் வலியும் சேர்த்தே

கைமாறாய் தந்துவிட்டு

வந்ததிற்கு அடையாளமாய்

செந்நிறப் புள்ளியும் இட்டுவிட்டு

ஆள்மாறிவிடுவாளாம் அடுத்த வீட்டிற்கு!

இத்தகைய அறிகுறிகள் ஏதும்

உங்கள் உடலில் தென்பட்டால்

நொடிப் பொழுதும்

தாமதியாது ஓடி விடுங்கள்

நோய் சிகிச்சைக்காய் வைத்தியசாலைக்கு!

தாமதித்தால் சமாதி அடைவது திண்ணமே!

விழி மூடித் தூங்கிவிட்டால்

வழி காட்டி விடுவாள் படுகுழிக்கே!

வாரம் தோறும் வீடு வாசலை நித்தம்

சுத்தமாய் வைத்திருந்து சத்தம் போடாமல்

வந்தவளை வந்த வழியே ஓட்டம் காட்டி

விரட்டி அடித்து விட்டால்

வாழலாம் நாம் எல்லோரும்

நலம்பல பெற்றே?

Comments