இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற ஏக்கங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற ஏக்கங்கள்!

ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இரண்டரை வருடங்கள் நிறைவடைந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பொதுத் தேர்தல் மூலம் இன்றைய அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் இரண்டு வருடங்கள் நிறைவடையப்போகின்றது.

கடந்த இரண்டரை வருட காலப் பகுதியில் நாட்டில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; மக்களின் எத்தனையோ எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் தான் முன்னைய ஆட்சியை அகற்றுவதற்கும், இப்போதைய ஆட்சியை மலரச் செய்வதற்கும் மிகவும் ஒத்தாசையாக நின்றார்கள்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமானவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமாவர். தமிழர்களும் முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டிருக்காது போனால், இன்றும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சியே தொடர்ந்துகொண்டிருக்குமென்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சிங்கள மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒப்பீடு செய்வோமானால், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அளித்துள்ள பலத்தையும், பங்களிப்பையும் இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

தமிழர்களும் முஸ்லிம்களும் முன்னொருபோதுமே இல்லாதவாறு ஓரணியில் நின்று நல்லாட்சியை மலரச் செய்வதற்கு முடிவெடுத்தமைக்கான காரணம் நன்கு வெளிப்படையானதாகும்.

மைத்திரி- ரணில் கூட்டணி மீது சிறுபான்மை மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்க்கிலும், மஹிந்த அரசு மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பும் ஆத்திரமுமே அதிகமானவையாகும். கடந்த 2015ம் ஆண்டு நடந்து முடிந்த இரு தேர்தல்களிலும் மைத்திரி- ரணில் கூட்டணியை சிறுபான்மையினர் ஆதரித்தமைக்கான பிரதான காரணமே ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்பது தான்.

மஹிந்தவை தேர்தலில் தோற்கடித்தமை தமிழ், முஸ்லிம் மக்களுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். சிறுபான்மையின மக்களை அடிமைகளாகவும், இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் கருதி சர்வாதிகாரத்தனத்துடன் ஆட்சி நடத்திய மஹிந்தவின் அரசை இத்தனை எளிதாக வீழ்த்த முடியுமென்று சிறுபான்மையினர் சற்றும் கூட நினைத்திருந்ததில்லை.

ஆட்சி மாற்றமானது முன்னைய காலத்துடன் ஒப்பிடுகையில் நிறைய மாற்றங்களைத் தந்துள்ளதென்பதில் சந்தேகமில்லை. இம்மாற்றங்களால் முதலில் நிம்மதியடைய வேண்டியவர்கள் சிறுபான்மையினராவர்.

முன்னைய ஆட்சியின்போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் எத்தகையதென்பதை சிறுபான்மை மக்கள் படிப்படியாக மறந்து வருகின்றபோதிலும், வரலாற்றை இலகுவில் மறைத்து விடமுடியாது. உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகின்ற முழுமையான சுதந்திரத்தை ஏற்படுத்தியதே இன்றைய அரசுதான். முன்னைய ஆட்சிக் காலத்தின்போது போராட்டம் நடத்துவதற்கான உரிமை சிறுபான்மை மக்களுக்கு இருக்கவில்லை.

ஆனாலும் ஜனநாயக சுதந்திரத்தினால் மாத்திரம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறிவிடப்போவதில்லை. சிறுபான்மையின மக்கள் இன்றைய அரசிடம் முக்கியமான பல விடயங்களை எதிர்பார்க்கின்றனர். யுத்தம் நிலவிய முப்பது வருட காலப் பகுதியிலும், யுத்தத்துக்குப் பின்னர் நிலவிய மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் தாங்கள் இழந்துபோன வாய்ப்புகளையும் வசதிகளையும் இன்றைய அரசு தங்களுக்கு நிறைவேற்றித் தர வேண்டுமென வடக்கு,கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இம்மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாகப் போராடி வருகின்ற அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால், அடிப்படைப் பிரச்சினைகளில் ஏராளமானவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பது, வடக்கிலும் கிழக்கிலும் காணிகள் தொடர்ச்சியாக கபளீகரம் செய்யப்படுவது என்றெல்லாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

அதே சமயம் வட பகுதியில் இருந்து முன்னர் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் விவகாரம் முஸ்லிம் அரசியல் தரப்பிலிருந்து பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இக்கோரிக்கையை சமீபகாலமாக பலமாக வலியுறுத்தி வருகின்றார். வடக்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக தனது ஆதங்கத்தை வெளியிட்ட அவர், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மண்ணில் வைத்தும் இதே விடயத்தை வலியுறுத்தியிருக்கின்றார். முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லையென்பதே ரிஷாட் பதியுதீனின் ஆதங்கம்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்களது முன்னைய வாழ்விடங்களில் மீளக்குடியேற வேண்டுமென்ற ஏக்கங்களுடன் வாழ்பவர்களாவர். எனவே அவர்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் முழுமையான நியாயம் உண்டு. அவர்கள் மனம் விரும்பி தாமாக சுய விருப்பில் இருப்பிடங்களை விட்டு வெளியேறவில்லை. பலவந்தமாகவும், அச்சத்தினாலும் அவர்கள் இடம்பெயர்ந்தவர்களாவர்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நிகராக, கிழக்கிலும் பல்வேறு இடங்களில் இருப்பிடங்களை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் இன்னமும் ஏக்கங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது காணிகளை மீட்டெடுப்பது குறித்தும், மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கரிசனைகொள்ள வேண்டியுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பல கிராமங்களில் தமிழ் மக்கள் தங்களது வாழ்விடங்களைப் பறிகொடுத்து நீண்ட காலமாகிவிட்டது. சில கிராமங்களில் தமிழ் மக்கள் முன்னர் வாழ்ந்தமைக்கான அடையாளங்களே முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. தாங்கள் முன்னர் வாழ்ந்த காணிகளின் உறுதிப்பத்திரத்தையோ அல்லது ஒப்பந்தத்தையோ பத்திரமாக வைத்துக்கொண்டு மீள்குடியேற்ற ஏக்கங்களுடன் அவர்களும் வாழ்கின்றனர்.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு, இம்மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டெடுத்துக்கொடுப்பதற்கான தார்மிகப் பொறுப்பு உண்டு. எனினும், தமிழ்க் கூட்டமைப்பினர் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதில்லையென்ற வேதனை தமிழ் மக்களுக்கு உண்டு.

வட பகுதியோ அல்லது கிழக்குப் பிரதேசமோ, எதுவாக இருப்பினும் மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவது அவசியம். யுத்த காலத்துக்கு முன்னர் அம்மக்கள் எங்கு வசித்தனரோ, அங்குள்ள அவர்களது காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போது தான் இயல்பு வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் உண்டு.

Comments