அர்த்தம் புரியாமல் அலசுவீர்
அசிங்கப் படுத்தி
அழகியலுக்குள் குதிரையோடுவீர்
போட்டிருந்த கவுணோடு ஓடிவந்து...
ஆண்டுக் கணக்காக
அகதி முகாமிற்குள்ளிருக்கும்
அவளது ஊத்தைகளைப் பார்த்து
முகம் சுளிப்பீர்
உடைமாற்ற வழியின்றி...
ஊத்தையொடு எம் குமர்கள்
கழிவறைக ளில்லாது காட்டிற்குள்
உழல்கையிலே
அழகியல் பற்றிய
உங்களது அறிவியல் வெளிப்பாடுகள்,...
உடைமாற்ற வழியென்ன
உண்டென்று எதுவும்
சொன்னீரா?...
செய்தீரா?...
அவளுடைய உள்ளத்தை....
உணர்வை,... உறைப்பை....
தெள்ளத் தெளிய திறனாய்ந்தீரா...?
செப்புதல்,....
ம்ம்ம்...பேசமாட்டீர்கள்
ஊத்தைகளை மட்டும்
ஓடியோடித் தேடுகிற
ஆற்றலாளர்களே!
கொஞ்சம் இறங்கிவந்து
மண்ணிலே கால்வைத்து
மனம் பொசுங்கி...
உயிரோடு, மடிந்து கொண்டிருக்கும்
மக்களது இயலைப் பாருங்கள்,
பின்னர்,
உங்கள் அறிதல்பற்றிப் பேசுங்கள்
தகப்பனுக்கு மகனில்லை
தாயுண்டு மகளில்லை
நினைத்தவளைப் பறிகொடுத்து
நிற்பவர்கள் எத்தனைபேர்...?
ஊரை அறியாமல்
அங்கு உள்ள நிலை அறியாமல்
ஆரும் பேசாதீர்கள்
மனிதம் இன்னும் அனலினிலே