காத்தான்குடி கலைமதி றபாய்தீன்
மண்ணுக்கு வந்த மனிதா! நீ
உன்னுக்குள் உள்ள
உள்ளுணர்வுகளை நோக்கு!
உதவா(த) தன்மைகளை
உன்னிலிருந்து நீ நீக்கு!
எண்ணம் எண்ணங்களை
ஏற்றதாக நீ ஆக்கு!
தன்னலச் செயல்களை
தன்னிலிருந்து நீ போக்கு!
வாழுகின்ற வழிகளை
வாழ்வில் நீ தேடு!
ஆளுகின்ற அறிவினை
நாளும் நீ நாடு!
நலமிக்க நன்மைகளை
வளமாகப் பாடு!
எழில்மிகு ஏற்றம்காண
என்றும் நீ கூடு!
நேசவுறவுகளை நீ
நெஞ்சால் நேசி!
பாச பந்தங்களை
பாங்காக (வி)சுவாசி!
பாருலகில் மனிதா நீ
பாவம் நீ பரதேசி!
சீர்படுத்த உன்வாழ்வை
சிறப்பாக யோசி!
வாய்மைகளை வாழ்வில் நீ
வகையான ஊட்டு!
தூய்மையாக என்றும் நீ
வாழ்ந்துதான் காட்டு!
நீதி நேர்மையை
நிலையாக நாட்டு!
அநீதி அராஜகத்தை
அடியோடு ஓட்டு!
சொல்வாக்கால் நீயும்
செல்வாக்குப் பேணு!
நல்வாக்கால் வாழ்வில்
நாணயம் காணு!
இல்வாழ்வில் இணைந்து
இன்பமே காணு!
புத்தம் புதுமனிதனாய்
புவியிலே வாழு!