மக்கள் ஆணையே முரண்பாட்டைத் தீர்க்கும் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் ஆணையே முரண்பாட்டைத் தீர்க்கும்

நிறைவேற்று அதிகாரமா? பாராளுமன்றமா? மூன்று வாரங்கள் நீடித்த இந்த இழுபறி நிலைக்கு மத்தியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 26ஆம் திகதி இரவு தொடங்கிய அரசியல் கொதிநிலை நேற்று முன்தினம் இரவு ஓரளவு தணிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை நேர்மையுடன் நடத்த முடியாததாகக் கூற பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்ட கையோடு, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அன்றைய தினத்திலிருந்து ஏற்பட்ட அரசியல் கொதிநிலை நாட்டை ஒருவித பதற்றத்திற்குள் இழுத்துச் சென்றிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியது சட்டவிரோதம் என ஐ.தே.க உட்பட சில அரசியல் கட்சிகள் கோஷம் எழுப்பின என்றாலும் ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியதாகவும் கூறுகிறார்.

பதவியிலிருந்து தன்னை நீக்கியது தவறென்றால் அல்லது சட்டவிரோதமான செயலென்றால் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் சென்றிருக்கலாம். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை அதற்கும் காரணம் இருக்கிறது. அது அவருக்கே நன்றாகப் புரியும்.

பாராளுமன்றத்தில் தனது ஆதரவை நிரூபிக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கையோடு அவர் இருந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது என ஐ.தே.க தரப்புக் கூறுகிறது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின் பாராளுமன்ற அமர்வு நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு ஏற்பட்ட பரபரப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட ஜனாதிபதி நவம்பர் 14ஆம் திகதிக்கு அமர்வை முன்ன கர்த்தினார்.

அரசியலமைப்பின் படி, 14ஆம் திகதி கூடும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையாற்ற வேண்டும். அவரின் சிம்மாசன உரையைத் தொடர்ந்து அன்றைய தினம் அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும்.

ஆனால், அன்றைய தினமே ரணில் விக்கிரமசிங்கவின் பெரும்பான்மையை நிரூபிகக் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். இது அவரின் வரம்பு மீறிய செயலாகவே பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் என்பது மிகவும் கண்ணியத்துக்குரியவர். நாட்டின் மூன்றாவது குடிமகன். பாராளுமன்றத்தின் ஜனநாயகக் காவலன் என்று மதிக்கப்படுபவர். ஆனால், தனது நிலையியற் கட்டளையையும் மீறி அவர் கட்சி சார்பு நிலைப்பாட்டில் செயற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் ஜனாதிபதியின் பிரகடனத்திற்கமையக் கூடும்போது, ஜனாதிபதியின் சிம்மாசன உரை மாத்திரம் இடம்பெறுவதுதான் நிலையியற் கட்டளை. ஆனால், அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக அறிவித்தது, நிறைவேற்று அதிகாரத்தோடு மோதுவதற்கு ஒப்பானது.

அல்லது தனது பாராளுமன்ற வரையறைக்குள் இருந்து நிறைவேற்று அதிகாரத்திற்குள் செல்வதற்கு முற்படுகின்றாரென்றே கருதமுடியும்.

சம்பிரதாய பூர்வ அமர்வு இடம்பெற்றதன் பின்பு, பிறதொரு தினத்தை தேர்வு செய்து வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை.

ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றவரும் போது, சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த முற்பட்டால் சபையினுள் பெரும் அமளித்துமளி ஏற்படுவது மட்டுமல்ல பெரும் குழப்பம் உருவாகுமென்பது சபாநாயகருக்கு புரியாததல்ல.

நவம்பர் 14ஆம் திகதி கூடும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. மிகவும் பரபரப்பும், எதிர்பார்ப்புடனும் கூடவிருந்த பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே அவரது மறைமுக இலக்காகத் தெரிகிறது.

நிறைவேற்று அதிகாரமா? பாராளுமன்றமா? என்ற இந்த மோதலுக்கு பாராளுமன்றம் முற்றுப்புள்ளி வைக்குமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், சபாநாயகரின் நிலைப்பாடு, நிறைவேற்று அதிகாரத்தோடு நேரடியாக மோதுவதாகவே இருந்தது.

இந்நிலையில், 14ஆம் திகதி சபை கூடுமாக இருந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட்டிருக்குமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே, இதனைத் தவிர்க்க பாராளுமன்றத்தை அன்றைய தினம் கூட்டாது தவிர்ப்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்கும்.

சபையைக் கூட்டி நீதிநிலை கெட்டுப்போவதனைவிடவும் மேலான விடயம் மக்கள் நீதிமன்றத்தை நாடுவதாகும்.

நாட்டின் உயரிய சட்டவாக்க சபை கலைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்.

என்றாலும், அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் 33/2/C சரத்தின் கீழ் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நான்கரை வருடங்களுக்குப் பின்பே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும். ஆனால், நாட்டில் ஸ்திரமற்ற நிலை உருவானால், உரிய காலத்திற்கு முன்பே பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென அரசியலமைப்பு கூறுகிறது.

உண்மையில், பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்று சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் கோருதல், 2. குற்றப்பிரேணை கொண்டுவருதல் 3. ஸ்திரமற்ற நிலையில் கலைப்பது.

இவை அனைத்துமே அரசியலமைப்பின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்.

இந்த நிலையில், பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் என்பது ஆற்றாமையின் வெளிப்பாடு மாத்திரமல்ல அரைவேக்காட்டுத் தனமும் ஆகும்.

பாராளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக உச்சமன்றை நாடப்போவதாக ஐ.தே.க கூறுகிறது. ஆனால், ஒன்றை மாத்திரம் சொல்ல முடியும். ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு எதிராக எவரும் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யமுடியாது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மிகத்தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே, பாராளுமன்ற கலைப்பு இரண்டு விடயங்களுக்கு தீர்வுகண்டிருக்கிறது. ஒன்று, இரத்தக்களரி ஏற்படுவதைத் தவிர்த்திருக்கிறது. மற்றயது, நிறைவேற்று அதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள சட்ட இழுபறிக்கு மக்கள் தான் தீர்ப்பு வழங்கவேண்டுமென்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆகவே, மக்கள் தீர்ப்பை நாடியிருப்பதை எவரும் ஜனநாயக விரோதச் செயலென கூறினால் அது அரைவேக்காட்டுத்தனம். 2019 ஜனவரி 05ஆம் திகதி மக்கள் வழங்கும் தீர்ப்புத்தான் ஸ்திரமான நாட்டை உருவாக்கும்.

 

Comments