பசும்பால் திட்டத்துடன் தெளிவான பாதையும் வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பசும்பால் திட்டத்துடன் தெளிவான பாதையும் வேண்டும்

கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்குப் பால் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் நாளை (22) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படுகிறது. 

மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்திட்டத்திற்கு அமைய இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் முதன் முதலாக அப்போதைய கல்வியமைச்சர் (1956) டபிள்யூ.தஹாநாயக்க பாடசாலை மாணவர்களுக்குப் பாலும் பணிசும் வழங்கினார். எனினும், அந்தத் திட்டம் தொடரவில்லை.  

அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பல தலைவர்களும் பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்துவதற்குப் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்தார்கள். எனினும், எந்தத் திட்டமும் முறையாகக் கையாளப்படாததன் காரணமாகத் தொடர முடியாமல் இடையில் நின்றுவிட்டதே வரலாறு. 

இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பால் வழங்கும் திட்டத்தை தேசிய மட்டத்தில் தொடங்கி வைக்கிறார். பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ஜனாதிபதி முன்னெடுத்த அதிரடி நடவடிக்ைகயாகக் கருதப்படுவது, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்தமை. பிள்ளைச் செல்வங்களைப் பெற்றோரின் அழுத்தத்திலிருந்து விடுவித்தமை பிஞ்சுகளுக்குக் கிடைத்த விடுதலை என்றுதான் சொல்ல வேண்டும். 

அந்த மகிழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னர் மற்றொரு அறிவிப்பாக வந்திருப்பதுதான் பால் வழங்கும் தேசிய செயற்றிட்டம். இப்படி அரச தலைவர்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் சரியாக; நேர்த்தியாக நடைமுறைப்படுத்தப்படும்போதுதான், அதன் உண்மையான அனுகூலத்தை நாடு அனுபவிக்க முடியும். மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளைச் சார்ந்தது. எனினும், அதிகாரிகள் மட்டத்தில் இந்தத் திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்காவிட்டால், எந்தப் பணியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிடும். இலவசத் திட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அதன் மூலம் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியும் 

உதாரணமாகப் பாடசாலை மாணவர்களுக்குச் சத்துணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது அதனை அதிகாரிகள் சரியாக அமுல்படுத்தாமல், நிதி மோசடி செய்ததாகப் பாடசாலைகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்தன. அதிபர்கள் சத்துணவு வழங்காமலேயே செலவுக் கணக்குகளைக் காண்பித்ததாகச் சொல்லப்பட்டது. ஏன், சீருடைத்துணி விநியோகத்திலும்கூட ஊழல் இடம்பெற்றதாகக் கூறினார்கள். அதன் பின்னர் சீருடைக்கான 'வவுச்சர்' வழங்கப்பட்டபோதும் முறைகேடு இடம்பெற்றதாகச் சொன்னார்கள். இப்படி எதனைத் தொட்டாலும் ஊழலும் முறைகேடுமாகவே காணப்படுகிறது. 

ஆகவே, பால் வழங்கும் திட்டத்தை மிகத்துல்லியமாகக் கவனிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். ஏனெனில், பால் விநியோகத்தில் மிக இலகுவாக ஊழல் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே திரவப் பாலில் அதிகளவு தண்ணீர் கலக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார் இருக்கிறது. 

பிள்ளையின் முதல் உணவு பால்; இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை...ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை எனலாம். ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’ என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85சதவிகிதம் என்று தரவுகள் கூறுகின்றன. 

பசும்பால், தாய்ப்பாலுக்கு இணையானது. ஃபோலிக் அமிலம் தயமின், பொற்றாசியம் நிறைந்தது. பசும்பாலில் அனைத்துவித அமினோஅமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு குறைவு. கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று ​ெலாக்டிக் அமிலமாக மாறுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ​ெலாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது. வளரும் குழந்தைகள், சிறுவர்களது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். ஆகவே, பாலைத் தரத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும்போதுதான் இந்தப் பலன்களை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பாலில் அளவிற்கு அதிகமாகத் தண்ணீரைக் கலந்துவிட்டார்கள் என்றால், எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாது.  

பாடசாலைக்கு வரும் கனிஷ்ட வகுப்பு மாணவர்கள் சரியாக உணவு எடுத்துக்ெகாள்ளமாட்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. காலையில் என்றாலும் பாடசாலை முடிந்து வீடு செல்லும்போது என்றாலும் அவர்களுக்கு உணவு விடயத்தில் குறைபாடுகள் உண்டு. அதிலும் கிராமப்புற மாணவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனாலேயே அவர்களுக்குப் போஷாக்குக் குறைபாடு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  பெற்றோரைப் பொறுத்தவரை அவர்கள், பிள்ளைகளின் பெறுபேற்றிலேயே கூடுதல் கவனத்தைச் செலுத்துகிறார்கள். இன்றைய கல்வி முறைமை என்பது பிள்ளைகளைப் பெறுபேற்றுக்காகத் தயார்படுத்துவதாகவே உள்ளது. பெறுபேற்றினால் மாத்திரம் நல்ல மனிதர்களை உருவாக்க முடியாது. இதனைப் பல தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைகளில் உணர்த்தப்பட்டிருக்கின்றது. படித்துப் பட்டம் பெற்றுக்ெகாண்டதன் பின்னர், வேலைக்காகப் போராட்டம் நடத்தும் வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும்.

அந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதியே குறிப்பிட்டிருக்கின்றார். நூற்கல்வியோடு சிறந்த வாழ்வியல் தத்துவங்களையும் பிள்ளைகளுக்குக் கற்பித்து அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்குவதோடு அவர்கள் தேகாரோக்கியத்திலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி கரிசனையுடன் இருக்கிறார். ஆகவே, கனிஷ்ட மாணவர்களுக்குப் பால் வழங்கும் திட்டத்தைச் செவ்வனே தொடர்வதற்கான முன்னேற்பாடுகளையும் சமகாலத்தில் மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

நாட்டில் உள்ள கனிஷ்ட பாடசாலைகளில் பயிலும் சுமார் பத்து இலட்சத்து 30ஆயிரம் மாணவர்களுக்குப் பாலை வழங்க நடவடிக்ைக எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கென இந்த ஆண்டில் சுமார் 4000மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஷாக்கில் குறைபாடு நிறைந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

 அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் பாலின் மீதுள்ள மோகத்தைக் குறைக்கவும் உள்ளூர் பாற்பண்ணையாளர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பக்கற் பாலின் மீதான நாட்டத்தைக் குறைக்க வேண்டுமானால், சிறுவர்கள் மத்தியில் பசும்பால் மீதான ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அது வழங்கப்படும் பாலின் தரத்தை உறுதிசெய்வதிலேயே தங்கியிருக்கின்றது.

அவ்வாறு தரமான பால் பிள்ளைகளுக்குப் பெற்றுக்ெகாடுக்கப்படுமானால், அவர்கள் ஊடாக அந்தச் செய்தி பெற்றோருக்குச் சென்று படிப்படியாக தேசிய உற்பத்தி மீதான நாட்டத்தை முழுமைப்படுத்த முடியும்.

அதன் மூலம் மாணவர்களைத் தேகாரோக்கியம் நிறைந்தவர்களாகவும் மூளைசாளிகளாகவும் உருவாக்க முடியும்.   ஆகவே, வழங்கும் பால் தூய்மையானதாக இருக்கும் அதேநேரத்தில், அதிகாரிகளின் செயற்பாடுகளும் தூய்மையானதாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்!  

Comments