எதிரணியில் இருந்த போதும் ராஜா மிடுக்குடன் இருந்தவர் எனது தந்தை | தினகரன் வாரமஞ்சரி

எதிரணியில் இருந்த போதும் ராஜா மிடுக்குடன் இருந்தவர் எனது தந்தை

எதிர்க்கட்சியில் ஐந்து வருடங்களாக இருந்த போதும் மலையகத்தை தன் கைக்குள் அடக்கி ஆட்டிப்படைத்தவர் தான் எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான்.

அன்று அந்த ஐந்து வருடங்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் எனது தந்தையைக் கண்டு நடுங்கினார்கள். அவருக்கு நேருக்கு நேராக நின்று கதைக்க பயப்பட்டார்கள். மறைவில் எனது தந்தையை விமர்சித்து தங்களது அரசியலை நடத்தினார்கள்.

இன்று எனது தந்தை இல்லாத காரணத்தினால் அவரை வைத்து மீண்டும் பிழைப்பு நடத்துகிறார்கள். இத்தகையவர்களை மலையக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகத்தில் அரசியல் செய்கின்ற பலருக்கும் அரசியல் நாகரிகம் துளியளவும் கிடையாது. 

மற்றவர்களை குறை கூறியே அவர்களது அரசியல் பிழைப்பு நடந்து வருகிறது. அரசியல் நாகரிகத்தை அவர்கள் கற்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவர்களுக்கு நிச்சயம் கற்றுக் கொடுப்போம் என்றும் ஜீவன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு மிகப்பெரிய ஆலமரம். அது பரந்து விரிந்த ஒரு விருட்சம். அத்தகைய பெரிய குடும்பம் ஒன்றை நாங்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வழி நடத்தி வருகின்றோம். இதனைச் சிலர் கூறுபோட நினைத்தார்கள்.அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல.பதவி என்பது எம்மை தேடி வரவேண்டும். அவ்வாறு தேடி வரும் பதவியே நிலைத்து நிற்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்த வரையில் பதவிக்கான போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது காங்கிரஸில் விரும்பியவர்கள் வரலாம்,  விரும்பியவர்கள் போகலாம். ஆனால் போனவர்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள். எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவும் படமாட்டார்கள் என்றார்.

Comments