இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வீதியோரத்தில் காய்கறிகள் விற்ற பெண்ணிடம் அடாவடித்தனம் அமைச்சர் ஜீவனின் பணிப்புக்கமைய தோட்ட நிர்வாகி உடனடி பணி நீக்கம் | தினகரன் வாரமஞ்சரி

இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வீதியோரத்தில் காய்கறிகள் விற்ற பெண்ணிடம் அடாவடித்தனம் அமைச்சர் ஜீவனின் பணிப்புக்கமைய தோட்ட நிர்வாகி உடனடி பணி நீக்கம்

இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கண்டிப்பான உத்தரவின் பிரகாரமே, மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோருவதற்கும், மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ராகலை, ஹைபோரஸ்ட் பகுதியின் பிரதான வீதியின் ஓரத்தில்,பெண்ணொருவர் மரக்கறி வகைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

அவ்விடத்துக்கு வந்த மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி, அவ்விடத்தில் மரக்கறி விற்பனை செய்ய வேண்டாமென அப்பெண்ணை கடும் தொனியில் மிரட்டி – காய்கறிகளை காலால் உதைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பின்னர், மத்துரட்ட பிளான்டேசனுக்கு உடன் அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் ஜீவன் தொண்டமான், அந்த நிர்வாகியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அவரை உடன் நீக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

இதனை ஏற்ற பெருந்தோட்ட யாக்கம், அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்தது.

Comments