தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதியானார் | தினகரன் வாரமஞ்சரி

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதியானார்

சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்னத்தை தவிர, காக் சோங் (வயது -75), டான் கின் லியான் (வயது -75) ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டுவரும் மக்கள் செயல் கட்சியின் பெயர், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டெம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

ஜனாதிபதியாக தற்போது தெரிவாகியுள்ள தர்மன் சண்முகரத்தினம், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுனராவாரென்பதுடன், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம், தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். கடந்த 2016ஆம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், சிங்கப்பூரில் அதிகாரம் மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்தினம் வரவேண்டுமென்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

1959ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கு பின்னர், சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது. அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். எதிர்வரும் 2025ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்தினத்தை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்ம சங்கடப்படுத்துமென்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால், அது தொடர்பாக தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்தினமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லையென்று வெளிப்படையாக அறிவித்தார். மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்தினத்தை ஜனாதிபதியாக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தெரிவு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்துக்கொண்டுள்ளதாக, அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாராளுமன்றம் செய்த சட்ட திருத்தங்களால், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, ஹலிமா யாகூப் மட்டுமே போட்டியிடத் தகுதியானவராக இருந்தார். அந்த திருத்தத்தின்படி, குறிப்பிட்ட இனக்குழுவிலிருந்து தொடர்ந்து 5 தடவைகள் யாரும் அதிபராகவில்லை என்றால் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார். 2017ஆம் ஆண்டு 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அங்கே அரிதான நிகழ்வாக போராட்டங்கள் எழுந்தன.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா அல்லது யுராஷியன் வம்சாவளியினராவர்.

இந்த ஆண்டு அனைத்து இனக் குழுவினரும் போட்டியிடலாமென்று அறிவிக்கப்பட்டது. இதற்கமைய, தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (வயது-75), டான் கின் லியான் (வயது-75) ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர். 27 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

இதில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காக் சோங் 15.7 சதவீத வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

Comments