வீதி விபத்துகளுக்கு வேண்டும் ஒரு முற்றுப்புள்ளி | தினகரன் வாரமஞ்சரி

வீதி விபத்துகளுக்கு வேண்டும் ஒரு முற்றுப்புள்ளி

கடந்த ஒரு வருட காலமாக நாம் இடைவிடாது பேசி வந்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அது கொவிட் -19 தொற்று மற்றும் அது ஏற்படுத்தக்கூடிய மரணம் தொடர்பானதாகவே இருந்திருக்கிறது. சில சமயங்களில் கொவிட் தொற்றுக்கு நாம் அனாவசியமான அதிக முக்கியத்துவம் அளித்துவிட்டோமோ என்றும் தோன்றுகிறது. ஏனெனில் இத் தொற்றுக்கு வழங்கிய முக்கியத்துவத்தால் வேறு சிலவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. இத் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியாக காய்ச்சல், தடிமன், தலைவலி, சளிப்பிரச்சினை, வயிற்றுப் பிரச்சினைகள் போன்றவை குறைந்து விட்டன. இவற்றின் பொருட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்தோர் தொகை கணிசமாகக் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை கணித்திருக்கிறது. அதுபோலவே சாலை விபத்துகளும் மரணங்களும் கடந்த ஆண்டில் வீழ்ச்சி கண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்பத்திரிகளுக்கு செல்வோர் தொகை குறைந்ததால் அரசுக்கு மருத்துவ செலவுகள் குறைந்த அதே சமயம் நோயாளர் தரப்பிலும் மருத்துவம் தொடர்பிலான செலவுகளில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இன்னொரு வகையில் சொல்வோமானால், சுயமாகவே குணமாகக் கூடிய அல்லது நாமாகவே குணப்படுத்தக் கூடிய ‘வியாதி’களுக்குத்தான் நாம் இவ்வளவு காலமாக தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளுக்குச் சென்று அனாவசிய செலவுகளை ஏற்படுத்தி வந்திருக்கிறோம் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

எளிமையான ஆனால் பலன் தரக்கூடிய சுகாதார பழக்கவழக்கங்களை நாம் தற்போது கைகொள்ளப் பழகியிருக்கிறோம். நோய்களில் இருந்து அவை எம்மைக் காக்கின்றன என்பது தற்போது ஆதாரபூர்வமாக ருசுப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போலவே மேலும் சில பழக்க வழக்கங்களையும் நாம் கைகொள்வோமானால் மேலும் நம் உடலையும், உயிரையும் வேறு சிலரின் உயிர்களையும் எம்மால் காப்பாற்ற முடியும் என்பதை இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

நாம் இங்கே குறிப்பிட விரும்புவது நாட்டில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளும் மரணங்களும் மற்றும் அவயங்களை இழப்போரின் எண்ணிக்கை பற்றியும்தான். இரண்டுகோடி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் 24மணித்தியாலத்தில் 123 விபத்துகள் என்றும் 10 பேர் உயிரிழந்தனர் என்றும் இச் சம்பவங்களில் 77 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று தினங்களில் 40 பேர் வீதி விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். எதை எச்சரிக்கை மணியாகக் கொள்ள வேண்டும். விபத்தில் ஏற்படும் காயங்கள் நெடுநாள் சிகிச்சையையும் நிரந்தரமான அவய இழப்புகளையும் மாறா வடுக்களையும் தாங்க வேண்டும் என்பதைப் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. மேலும் பண்டிகைக் காலப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் எழுநூறுக்கும் அதிகமான வாகனசாரதிகள் மதுபோதையில் வண்டிகளை செலுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நத்தார், புத்தாண்டு, சித்திரை பண்டிகை போன்ற தேசிய பண்டிகை காலத்தில் கொழும்பு போன்ற பெரு நகரங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு பிரசாரங்களை போக்குவரத்து பொலிஸார் நீண்ட காலமாகவே மேற்கொண்டு வந்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் நெஞ்சைத் தொடும் ஒரு வீதிப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. சிறுவர் சிறுமியர் தமது தந்தைமாரிடம் மதுவருந்திவிட்டும், அலட்சியமாகவும், கைதொலைபேசியில் உரையாடிக்கொண்டும் வாகனமோட்ட வேண்டாம் என மன்றாடும் விளம்பரங்கள் சாலை யோரங்களில் சாரதிமார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததன. எனவே சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்காது’ என்ற பட்டுக்கோட்டையார் வரிகளின் அர்த்தத்தைப் போலவே பொலிஸார் தம்மாலானவற்றை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் எமது சாரதிமாரில் குறிப்பிடத்தக்க அளவினர் வீதி விதிகளையும் சட்டங்களையும் கொஞ்சமேனும் மதிப்பதற்குத் தயாரில்லை. கடந்த மூன்று மாதங்களில் 300 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் வெளியிட்டிருக்கும் தகவல் மேம்போக்காக பார்ப்பதற்கானது அல்ல. அவை ஏற்படுத்தியிருக்கும் வலிகள், இழப்புகள், இறப்புகள், நிர்க்கதியாகி வீதிக்கு வந்துள்ள குடும்பங்கள் என்பனவற்றையும் கணக்கில் கொள்ளும்போது சாரதிமாரின் அலட்சிய பாவத்தையும் மேம்போக்கான தன்மையையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஒரு விஷயம், அது எதுவானாலும் சரி, அளவை மிஞ்சுகின்றபோது அதைக் கட்டுப்படுத்தும் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டேயாக வேண்டும். அந்தச் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. மதங்களை நாம் உளப்பூர்வமாக அணுகுவதில்லை என்பதும் அதை கிரியைகள் சார்ந்த சடங்காகவே கருதுவதால்தான் மதங்கள் போதிக்கும் தத்துவங்களை நாம் நம் வாழ்வில் பயன்படுத்துவதில்லை என்பதும் உண்மையாகவே தெரிகிறது.

அதனால்தான் வெளியில் இருந்து புதிய கருத்துகளையும் உதாரணங்களையும் நாம்பெற வேண்டியிருக்கிறது. இலங்கையில் வீதி விபத்துகளும் அலட்சிய வாகன செலுத்தலும் சடுதியாகவும் தொடர்ச்சியாகவும் அதிகரித்து செல்வதால் புதிய மற்றும் கடினமான சட்டங்களும் விதிகளும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இலங்கையை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்களை சாலைகளில் கொண்ட மேற்கத்திய நாடுகளில் இந்த அளவுக்கு தொடர்ச்சியாக வாகன விபத்துகளும் மரணங்களும் நிகழ்வது மிகக் குறைவு. ஏனெனில் அங்கே சாரதிகளின் வீதி ஒழுக்கம் கண்டிப்புடன் கண்காணிக்கப்படுகிறது. தண்டனைகளும் கடுமையானவை.

தயவு தாட்சண்யம் பார்க்கப்படுவதில்லை. வீதி விதிகளை மீதியமை, மதுவருந்திய நிலையில் வாகனம் செலுத்தியமை, அதிக வேகம் போன்ற குற்றச்சாட்டுகளில் அரசியல் பிரபலங்கள் சிக்குவதும் தண்டம் செலுத்துவதும் அந் நாடுகளில் சாதாரணம். மறைந்த எடின்பரோ கோமகனும் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதால் தன் சாரதிப் பத்திரத்தை பொலிசாரிடம் ஒப்படைக்க நேர்ந்தது. இவ்வாறான முன்மாதிரிகளை இந்நாட்டில் காண்பது துர்லபம்.

எனவே வீதி விதிகளையும் அதற்கான தண்டனைகளையும் இலங்கையில் கடுமையாக்க வேண்டும். போக்குவரத்து பொலிஸார் சுதந்திரமாக இயங்குவது அரசினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்து பொலிஸாரிடம் சிக்கியதுமே ‘எனக்கு டிரஃபிக் ஓ.ஐ.சியை நன்கு தெரியும்’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்கள். இது பொலிஸாருக்கு விடுக்கும் ஒரு மென் பயமுறுத்தல்தான். பொலிஸார் தமது கடமைகளை எந்த அச்சமின்றியும் மேற்கொள்வதற்கு அனுமதித்தாலேயே வீதி விபத்துகளை பெருமளவில் குறைக்க முடியும். எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு விக்கினமின்றி தப்பிக்கலாம் என்ற மக்களின் மனப்பான்மையை முறித்தெறிவதே இங்கே முக்கியம்.

Comments