புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதியையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் மனோ கோரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதியையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் மனோ கோரிக்கை

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

எனினும், இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறதென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டமையை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டுமென விரும்புகிறோம்.  

தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும், இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளியென நாம் கருதுகின்றோம்.   எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.  

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குதமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டணியின் தலைவர், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments