கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து காரியமாற்ற வேண்டிய விடயம் | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து காரியமாற்ற வேண்டிய விடயம்

தமிழ் பேசும் இரு சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். இரு சமூகங்களும் இணைந்து பிரதேச செயலக விவகாரத்தில் முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்த சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்மொழிந்து கலையரசன் வழிமொழிந்துள்ள இந்தப் பிரேரணையில் யதார்த்தபூர்வமான பல பரஸ்பர பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நாங்கள் இங்கு அடையாளம் காண வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரம் சில அரசியல்வாதிகளின் தலையீட்டின் காரணமாக தடைப்பட்டுள்ளது எனக் கூறுவதைப் பார்க்கிலும், பல வருடங்களாக நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டு தமிழ் பேசும் சமூகங்களும் ஒற்றுமையாக இந்த எல்லைப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக பல முயற்சிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளோம்.

கடந்த ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் இவ்விடயம் தொடர்பிலான பல பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், நாங்களும் இணைந்து மேற்கொண்டு ஈற்றில் அதற்கென அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்து எல்லை நிர்ணய சபையொன்று உருவாக்கப்பட்டது.

பல முக்கிய எல்லை நிர்ணய பிரச்சினைகள் குறித்த சிக்கல்களுக்கும் நாங்கள் மிகத் தீவிரமாக ஆராய்ந்து இவற்றிற்கான சுமுகமான தீர்வை பெற வேண்டும்.

இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் இதை விடவும் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டுமென்பதும், நிர்வாக ரீதியாக வடகிழக்கில் பல இடங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் தான் தமிழ் பேசும் இனங்களாக இருக்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இந்த எல்லை நிர்ணயம் சம்பந்தமான விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவதன் நிமித்தமாக இவ்விடயம் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றோம்.
 

Comments