தடையை மீறி பேரணி நடத்தியமை; சாணக்கியன், ஜனா, கலையரசன் உட்பட 07 பேருக்கு அழைப்பாணை | தினகரன் வாரமஞ்சரி

தடையை மீறி பேரணி நடத்தியமை; சாணக்கியன், ஜனா, கலையரசன் உட்பட 07 பேருக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட 07 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்களெனக் கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடைஉத்தரவு பெறப்பட்டிருந்தது.  

எனினும் பேரணி கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி நடைபெற்றதுடன் நீதிமன்ற தடைஉத்தரவை மீறி தடைஉத்தரவு பெறப்பட்டவர்களென பெயரிடப்பட்டவர்கள் சிலர் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

கல்முனை பொலிஸாரினால் கடந்த 05 ஆம் திகதி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இதன்படி இவ் வழக்கு நடைபெற்றதுடன் நீதிமன்ற தடையுத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம், த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேசானந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  
 

Comments